லாப நஷ்ட கணக்கா? ஜெ.வீடு.. மறுக்கும் எடப்பாடி.. இதெல்லாம் அசிங்கம் - குமுறும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!
சென்னை : சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதை வாங்குவதில் விருப்பம் காட்டவில்லையாம்.
கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழகத்தின் அதிகார மையமாகத் திகழ்ந்த ஜெயலலிதாவின் வீட்டை அவரது வாரிசுகளான ஜெ.தீபா, தீபக் ஆகியோர் விற்பனை செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் வீட்டை அதிமுக சார்பில் வாங்கலாம் என ஓ.பன்னீர்செல்வம் யோசனை தெரிவித்தும், அதில் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

போயஸ் கார்டன்
அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்து மறைந்த ஜெயலலிதா தான் நடிகையாக இருந்தபோது சம்பாதித்த பணத்தில் கட்டிய வீடு வேதா நிலையம். போயஸ் கார்டனில் உள்ள இந்த வீடு, ஜெயலலிதா அரசியலில் கோலோச்சிய காலத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றது. கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக அதிமுகவிலும், தமிழகத்திலும் ஒரு அதிகார மையமாகவே திகழ்ந்தது போயஸ் கார்டனின் வேதா நிலையம். இந்த வீட்டில் வைத்து பல முக்கிய தலைவர்களைச் சந்தித்திருக்கிறார் ஜெயலலிதா.

அதிகார மையம்
வேதா நிலையத்தில்தான் அதிமுகவினரின் தலையெழுத்தே தீர்மானிக்கப்படும். வீட்டுக்கு வரச் சொல்லி ஜெயலலிதாவிடமிருந்து அழைப்பு வந்தால் அமைச்சர்கள் நடுக்கத்தோடுதான் செல்வார்களாம். அப்படி அமைச்சர்கள் மீதான புகார் தொடர்பான விசாரணை மட்டுமல்லாமல் பதவி நீக்க உத்தரவுகளும் இங்கிருந்து தான் பறந்தன. தன்னை பார்க்க வரும் தொண்டர்களுக்கு இந்த வீட்டின் பால்கனியில் நின்றுதான் கையசைப்பார் ஜெயலலிதா.

அரசுடமை
2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா உயிரிழந்த பின்னர் சசிகலாவும் அவரது உறவினர்களும் வேதா நிலையத்தில் இருந்தனர். சசிகலா, இளவரசி ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின்னர் வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டன. வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றையும் தமிழக அரசு பிறப்பித்தது. கடந்த ஜனவரி 28ஆம் தேதி அரசுடமையாக்கப்பட்ட வேதா நிலையத்தை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

குறுக்கே வந்த தீர்ப்பு
இந்நிலையில், ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள்தான் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும், அண்ணன் மகன் தீபக்கும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றியும் பெற்றனர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது எனவும் வேதா நிலையத்தை தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. வேதா நிலையம் சாவியை ஜெ.தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அடுத்து திமுக ஆட்சி அமைந்ததால் தமிழக அரசு இதில் மேல்முறையீடு செய்யவில்லை.

விற்பனை செய்ய திட்டம்
இந்நிலையில், ஜெ.தீபா, தீபக் இருவரும் இந்த வீட்டை விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் முக்கிய பகுதியான போயஸ் கார்டனில் உள்ள இந்த ஜெயலலிதாவின் வீடு பலநூறு கோடி மதிப்பு கொண்டது என்பதால் பணக்கார புள்ளிகளிடம் விற்பதற்கு பேசியதாக கூறப்படுகிறது. அதிமுகவின் முக்கிய புள்ளிகளிடமும் விற்பனை செய்யவிருக்கும் திட்டத்தைத் தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ்
ஆனால், ஜெயலலிதா வசித்த வீடு என்பதால், அவரது சொத்துகள், வழக்குகள் குறித்த சிக்கல்கள் வருங்காலத்தில் ஏற்படக்கூடும் என்பதால் பலரும் பின்வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடு விற்பனைக்கு இருக்கும் தகவல் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் தெரியவந்துள்ளது. உடனே, அவர், அதிமுக சார்பாகவே அந்த வீட்டை வாங்கலாம் என யோசனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

வாங்க மறுத்த எடப்பாடி பழனிசாமி
ஆனால், ஜெயலலிதா வீட்டை வாங்குவதற்கு எடப்பாடி பழனிசாமி விருப்பம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. பெரிய தொகை கொடுத்து வாங்கினாலும் கூட வரும் காலத்தில் சட்டச் சிக்கல்கள் ஏற்படலாம், அதுமட்டுமின்றி வாங்கினாலும் கூட அதை எந்த வகையில் பயன்படுத்துவது, தேவையில்லாததுதான் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாராம். இது அதிமுகவினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குமுறும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்ட திட்டமிட்டு, அதற்கு அவர் ஒப்புக்கொள்ளாததால், அவரது பதவியே காலாவதியானதாக கூறி வரும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்ஸை பொருளாளராகவும் செயல்பட விட மறுக்கிறார். அதிமுக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் காசோலையை ஓபிஎஸ் கையெழுத்திட்டு அனுப்பியும், அதில் கையெழுத்துப் போடாமல் இழுத்தடிக்கிறார். அவர் செய்யும் எதுவும் சரி அல்ல எனப் புலம்புகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

பிடிவாதம்
மேலும், அதிமுக தொண்டர்களின் இதய தெய்வமான ஜெயலலிதாவின் வீட்டையும் வாங்க மறுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி, கோடிக்கணக்கான தொண்டர்களின் தலைவி வசித்த வீட்டை பெறுவது அதிமுகவின் உரிமை, அதிலும் லாப நட்டக் கணக்கு பார்ப்பதா? ஓ.பன்னீர்செல்வம் யோசனை சொன்னதாலேயே எடப்பாடி பழனிசாமி முரண்டு பிடிக்கிறாரோ என்னவோ என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குமுறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications