அப்போ கேம் ஓவர்! எடப்பாடி லெட்டரில் "இதை" நோட் பண்ணீங்களா.. திமிறி எழும் 5 சட்ட சிக்கல்கள்.. போச்சே!
சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்று அழுத்தம் திருத்தமாக எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். அவர் இன்று ஓ பன்னீர்செல்வத்திற்கு எழுதிய கடிதத்தில் சில முக்கிய விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்... அதோடு அவர் கடிதம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் ஜூலை 9ம் தேதி நடக்க உள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், என்று மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இதில் கிட்டத்தட்ட 500 பதவிகளுக்கு அதிமுக நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். இதற்கு அவர்கள் வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரே இல்லை... ஓபிஎஸ் கடிதத்தை நிராகரித்தது ஏன்? எடப்பாடிபழனிச்சாமி அதிரடி
இரட்டை இலை சின்னம்
இன்று படிவம் ஏ மற்றும் பி இரண்டையும் அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இன்று மதியம் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான நேரம் முடிந்துவிட்டது. ஆனால் இந்த படிவத்தை சமர்பிக்காத காரணத்தால் அதிமுக வேட்பாளர்கள் எல்லோரும் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள். இதனால் இவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது. இந்த முறை இரட்டை இலை சின்னம் இடைத்தேர்தலில் போட்டியிடாது. இந்த ஏ , பி படிவங்களில் ஓபிஎஸ், இபிஎஸ்தான் கையெழுத்து போட வேண்டும்.
சின்னம் இல்லை
அவர்கள் போட்டு இருந்தால் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்து இருக்கும். இது தொடர்பாக நேற்றே எடப்பாடி பழனிசாமிக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அதில், படிவம் ஏ மற்றும் பியில் நான் கையெழுத்து போடுகிறேன் என்று அவர் இறங்கி வந்தார். நீங்கள் கையெழுத்து போட தயாரா? ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் கையெழுத்து போடுகிறேன்.. நீங்கள் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்து போடுவீர்களா என்று கேட்டார்.
வாங்கவில்லை
ஆனால் இந்த கடிதத்தை நேற்று எடப்பாடி பழனிசாமி கையால் கூட வாங்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தற்போது ஓ பன்னீர்செல்வத்திற்கு பதில் கடிதம் எழுதி உள்ளார். அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு வணக்கம் என்று தொடங்கும் அந்த கடிதத்தில், அதில், தங்களின் 29.06.2022-ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், திரு. மகாலிங்கம் அவர்கள் வழியாகப் பெறப்பட்டது. கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி
ஆகிவிட்டது. எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல., என்றுள்ளார்.
கடிதம்
மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.06.2022 அன்று முடிவுற்ற நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27.06.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்தக் கடிதம் ஏற்புடையதாக இல்லை.
என்ன சொன்னார்?
அதே போல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையுதாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
அழுத்தமாக சொன்னார்
இந்த லெட்டரில் கவனிக்க வேண்டிய விஷயம்.. ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். அதோடு தானும் இணை ஒருங்கிணைப்பாளர் கிடையாது. தலைமை கழக செயலாளர்தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது இரட்டை தலைமை பதவி காலியாகிவிட்டது என்று சிவி சண்முகம் சொன்னதை எடப்பாடி இப்போது கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளார். தன பெயருக்கு கீழ் இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை பயன்படுத்தாமல் தலைமை கழக செயலாளர் என்பதை அவர் பயன்படுத்தி உள்ளார்.
சட்ட சிக்கல்
ஆனால் இவரின் செயல் சில கேள்விகளை எழுப்பி உள்ளது. சட்ட ரீதியாக 6 கேள்விகளை எழுப்பி உள்ளது.
கேள்வி 1 - கடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் அது காலாவதி ஆகிவிட்டது என்கிறார் எடப்பாடி. அதே பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர் தேர்தல் நியமன தீர்மானமும் அங்கீகரிக்கப்படவில்லை. அப்படி என்றால் பொதுக்குழுவும் காலாவதியாகிவிட்டதா?
கேள்வி 2 - பொதுக்குழு உறுப்பினர்கள் பதவி காலாவதி ஆகிவிட்டது என்றால் எப்படி பொதுக்குழு கூட முடியும்.
கேள்வி 3 - பொதுக்குழு இல்லை என்று வைத்தால்.. பொதுச்செயலாளர் தீர்மானம் எப்படி நிறைவேற்றப்படும். எங்கு நிறைவேற்றப்படும்? யார் நிறைவேற்றுவது?
பொதுக்குழு
கேள்வி 4 - பொதுக்குழுவும் காலாவதி ஆனதை பயன்படுத்தி தலைமை கழகம் மூலம் எடப்பாடி தீர்மானங்களை நிறைவேற்ற பார்க்கிறாரா? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லாத பட்சத்தில் தலைமை கழக செயலாளர் (இங்கு எடப்பாடி) கூட்டங்களை கூட்ட முடியும். இந்த அதிகாரத்தை அவர் பயன்படுத்த உள்ளாரா?
கேள்வி 5 - ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலோடு மற்ற கட்சி தேர்தல் பதவிகள் அனைத்திற்குமான தீர்மானமும் கடந்த பொதுக்குழுவில் நிராகரிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிறது என்றால் அந்த பதவிகளும் காலாவதி ஆகிறதா? அதற்கு இனி தேர்தல் நடக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.