துரோகிகள் வெளியேறிவிட்டார்கள்.. 1,16,000 அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி எழுதிய கடிதம்! அதிமுக பரபர!
சென்னை : அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார். அதில், என் உயிர் உள்ளவரை அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன், அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தே தீருவேன் என எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில், அ.தி.மு.கவை துவக்கிய எம்ஜிஆரின் ஆளுமை, எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சியைப் பாதுகாத்த ஜெயலலிதாவின் ஆளுமை, ஜெயலலிதாவிற்கு பிறகு முதல்வரான தனது ஆட்சியின் செயல்பாடு, அதிமுகவை பாதுக்காக்க தான் பட்ட கஷ்டங்களைப் பட்டியலிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரைக் குறிப்பிடாமல், பதவி சுகம் கண்ட துரோகிகள் என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
மக்கள் நலன் ஒன்றை மட்டுமே மனதில் நிறுத்தி பணியாற்ற வேண்டும் என தொண்டர்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈபிஎஸ் திட்டம்
அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாட எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது. அக்டோபர் 17, 20 மற்றும் 26 ஆகிய 3 நாட்கள் அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள், அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 20-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். இந்தப் பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முக்கிய ஆலோசனை
இதற்கிடையே, அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக தொடக்க விழா பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியை பலப்படுத்துவது குறித்தும், அமைப்பு ரீதியாக காலியாக உள்ள பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

1,16,000 பேருக்கு பறந்த கடிதம்
இந்நிலையில், பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி கட்சியின் தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கட்சியின் அத்தனை மட்ட நிர்வாகிகளுக்கும், அதாவது சுமார் 1 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டது, அதிமுகவை தொடங்கியது, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா தலைமை தாங்கி கட்சியை கட்டுக்கோப்போடு நடத்தியது என பல்வேறு விஷயங்களையும் குறிப்பிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

என் உயிர் உள்ளவரை
மேலும், அதிமுகவில் அடிமட்டத் தொண்டர்கள் கூட கழகத்தின் தலைமை பதவிக்கும், அரசின் தலைமைப் பொறுப்பிற்கும் வர முடியும் என்பதற்கு நானே சாட்சி. என் உயிர் உள்ளவரை அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தே தீருவேன். அரசியல் பயணம் கரடுமுரடானது என்ற ஜெயலலிதாவின் வாக்கை பின்பற்றுவேன், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே மனதில் நிறுத்தி பணியாற்றுவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

துரோகிகள்
மேலும், இந்த இயக்கத்தால் பதவி சுகம் அனுபவித்தவர்கள் இந்த இயக்கம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிடக்கூடாது என நம்முடனே பயணித்த கண்ணுக்குத் தெரியாத துரோகிகள் எதிர் நின்று களமாடிய புறவாசல் திமுக ஆகியவற்றால் மிகச் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் நாம் ஆட்சியைப் பறிகொடுத்தோம். நாம் கொண்ட கொள்கையிலும், பயணத்திலும் தோற்கவில்லை.

வாரிசுகளுக்கு பதவி
தங்கள் எண்ணம் ஈடேறவில்லை, தங்களுக்கும் தங்களுடைய வாரிசுகளுக்கும் எதிர்பார்த்த பதவி கிடைக்கவில்லை என சிலர் இடம்மாறியுள்ளனர் தவிர உண்மையான தொண்டர்கள் ஒருவர் கூட இயக்கத்தைப் புறந்தள்ளி மாற்று இயக்கத்திற்குச் சென்றதில்லை என ஓ.பன்னீர்செல்வத்தையும் அந்தக் கடிதத்தில் விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

தொண்டர்கள் மத்தியில் தாக்கம்
அதிமுகவை பாதுக்காக்க தான் பட்ட கஷ்டங்கள், பிறர் செய்த துரோகங்கள் என பலவற்றையும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி, அதிமுக தொண்டர்களுக்கு தனித்தனியாக அனுப்பியிருக்கும் இந்த கடிதம் அதிமுக தொண்டர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications