ஓபிஎஸ் எங்க வேணாலும் போகட்டும்.. திரும்ப அது நடக்காது.. ‘பிளான் B’ - எடப்பாடியின் நெக்ஸ்ட் மூவ்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்திற்கு செக் வைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வந்தாலும், ஓபிஎஸ் நழுவி விடுவதால், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
Recommended Video
23ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்த உற்சாகத்தில் ஈபிஎஸ் தரப்பினர் இருந்த நேரத்தில், மேல்முறையீடு செய்து புதிய தீர்மானங்களை நிறைவேற்ற தடை பெற்றார் ஓபிஎஸ்.
அதுபோல, ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவிற்கு சிக்கல் ஏதும் வராமல், தனது திட்டம் முழுமையாக நிறைவேறும் வகையில் பல்வேறு மூவ்களை மேற்கொண்டு வருகிறார் ஈ.பி.எஸ்.

எல்லாம் சாதகமாக இருந்தும்
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், பொதுக்குழு நடத்தலாம், புதிய தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என உத்தரவிட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்சாகமடைந்தனர். ஆனால், நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற தடை போட்டனர். இதனால், கடந்த பொதுக்குழுவில் தனக்கு எல்லாம் சாதகமாக இருந்தும் எடப்பாடி பழனிசாமியால் ஒற்றைத் தலைமை குறித்த தீர்னானத்தை நிறைவேற்ற முடியவில்லை.

டெல்லி அரசியல்
பொதுக்குழுவில், ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் அன்றே டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச முயன்றார். ஆனால், அதற்கு பிரதமர் நேரம் ஒதுக்காத நிலையில் பாஜக மேலிட புள்ளிகளிடம் பேசியுள்ளார். அவர்களிடம் அதிமுக விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டையும், இனி என்ன திட்டத்தில் இருக்கிறார் என்பதையும் விவரித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை கூடாது என்கிற முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம்.

பொதுக்குழுவை தடுக்க
ஜூலை 11ஆம் தேதி நடக்கவிருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழுவில் தனக்கு எதிரான முடிவுகளை எடுப்பார்கள் என்பதால் அதை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும் என்பதில் ஓபிஎஸ் குறியாக இருக்கிறார். அதற்கு உதவி செய்யுமாறும் டெல்லி பாஜக புள்ளிகளிடம் ஓ.பி.எஸ் கோரியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல் எடப்பாடி பழனிசாமிக்கும் சென்றுள்ளது.

அடுத்தகட்ட பிளான்
பாஜக டெல்லி புள்ளிகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் பெருவாரியான ஆதரவு இருப்பதைக் காட்டியுள்ளார், நீங்களும் உங்கள் பக்கம் செல்வாக்கு இருப்பதை காட்டுங்கள், எல்லாம் தானாக நடக்கும் எனக் கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களின் ஆதரவைப் பெற ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு வருகிறார்.

ஈபிஎஸ் ஆலோசனை
கடந்த முறையைப் போல பொதுக்குழு விவகாரத்தில் கோட்டை விட்டு விடக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளாராம். தூங்கி எழுந்து வருவதற்குள் எல்லாமே மாறியதால் தான் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வர முடியவில்லை. இந்த முறை மிகவும் கவனமாக இருக்கவேண்டும், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை திட்டமிட்டப்படி வெற்றிகரமாக நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளாராம்.

ஒரே குறி
ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை நடத்தவிடக் கூடாது என ஓபிஎஸ் தரப்பு ஒரே குறியாக இருப்பதால், நாம் நிறைய போராட வேண்டியிருக்கும். போதாக்குறைக்கு ஓபிஎஸ் டெல்லிக்கும் சென்று பேசி வந்துள்ளார். அதனால், நாம் ஒரு திட்டத்தோடு மட்டுமல்லாமல் பிளான் பி-க்கும் தயாராக இருக்க வேண்டும். அது மட்டும் போதாது, போடும் திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஈபிஎஸ் ஆலோசனையின்போது அறிவுறுத்தி வருகிறாராம்.

ஆதரவாளர்கள்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் வாதங்களை முறியடித்து, பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தி, அந்தக் கூட்டத்தில் வைத்தே ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கி, அதில் எடப்பாடி பழனிசாமி அமரும் வகையில், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் ஈபிஎஸ். அதற்கான முயற்சிகளில் அவரது ஆதரவாளர்கள் நேரம் காலம் பார்க்காமல் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலிட ஆதரவு
ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை நடத்துவதற்கும், புதிய பதவியை உருவாக்குவதற்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சட்டப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்வதற்கும் தேவையான சட்ட ஆலோசனைகளைப் பெறும் முயற்சிகளிலும், பாஜக மேலிடத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றும் முயற்சிகளிலும் எடப்பாடி டீம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications