தோளில் ஏறும் ’தாமரை’! கழற்றி விடும் இபிஎஸ்! ‘அவங்களே’ விட மாட்டாங்க.. கூட இருக்கும் ஸ்லீப்பர் செல்!
சென்னை : மூன்று சதவீத வாக்குகள் வைத்திருக்கும் பாஜக 30 சதவீத வாக்குகள் வைத்திருக்கும் அதிமுகவின் தோளில் ஏறி பயணிக்கவே விரும்பும் எனவும், ஆனால் இதனை எடப்பாடி பழனிச்சாமி விரும்பாத நிலையில் பாஜகவை விட்டு அவர் விலகினால் அவரது ஆதரவாளர்களே அவருக்கு எதிராக திரும்புவார்கள் என மூத்த பத்திரிகையாளர் மணி கூறி இருக்கிறார்.
ஒற்றை தலைமை விவகாரம் அதிமுக அலுவலகத்தில் வெடித்ததில் இருந்தே செய்தியாளர் சந்திப்பு, சிறப்பு பேட்டிகள், ஆலோசனை என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் பேசி வந்தார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு நேர் எதிராக எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் வழக்கம்போல் அமைதியாகவே இருந்தார். பொதுக்குழு வரையிலேயே அவர் செய்தியாளர்கள் சந்திப்பை கூட தவிர்த்து வந்த நிலையில் ஆதரவாளர்கள் மூலமாக மட்டுமே தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார்.

எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும் சரி பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் சரி எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக தனது விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். ஆனாலும் ஓபிஎஸ்ஸை நேரடியாக விமர்சிக்காமல் துரோகம் செய்தவர், கழகத்திற்கு தீங்கு விளைவிக்க வேண்டுமென நினைப்பவர்கள் எனவே குறிப்பிட்டு பேசி வருகிறார். பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி விடலாம் என நினைத்திருந்த நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் அது கைகூடாமல் போனதால் அவர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

பாஜக தலைமை
இவற்றில் பாஜக தலைமையில் தலையீடு இருக்குமா என சந்தேகித்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக எடப்பாடி தரப்பு முன்னாள் அமைச்சர்கள் பாஜக தலைமைக்கு எதிராக பேசி வந்தனர். குறிப்பாக செங்கோட்டையன், கேபி முனுசாமி, கடம்பூர் ராஜு ஆகியோர் அடங்குவர். அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றி விடும் சமிஞ்கைகளாகவே இது கருதப்பட்டது. இதனால் பாஜக தலைமை கடுமையான கோபமடைந்ததாகவும், அதன் வெளிப்பாடாகவே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சார்ஜ் ஷீட்டெல்லாம் பதிவு செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர் எடப்பாடி தரப்பினர்.

தோளில் ஏறி..
இந்நிலையில் மூன்று சதவீத வாக்குகள் வைத்திருக்கும் பாஜக 30 சதவீத வாக்குகள் வைத்திருக்கும் அதிமுகவின் தோளில் ஏறி பயணிக்கவே விரும்பும் எனவும், ஆனால் இதனை எடப்பாடி பழனிச்சாமி விரும்பாத நிலையில் பாஜகவை விட்டு அவர் விலகினால் அவரது ஆதரவாளர்களே அவருக்கு எதிராக திரும்புவார்கள் என மூத்த பத்திரிகையாளர் மணி கூறி இருக்கிறார். இதுதொடர்பாக ஒன் இந்தியா தமிழ் அரசியலுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர், பாஜக - எடப்பாடி இடையேயான மோதல் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கழட்டி விடும் இபிஎஸ்
தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு அரசியல் கைகொடுக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை கழட்டி விடவே விரும்புகிறார். பாஜகவுடன் பயணிப்பதை எடப்பாடி பழனிச்சாமி முழுக்க முழுக்க விரும்பவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவை எதிர்த்தால் தான் அரசியல் செய்ய முடியும் என எடப்பாடி விரும்புகிறார். கடந்த முறை தனது தலைமையில் ஆட்சியை இழந்ததற்கு பாஜக எதிர்ப்பே காரணம் என நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டு சேர்ந்ததும் தோல்விக்கு ஒரு காரணம் என நினைக்கிறார்.

எதிர்க்கட்சி
பாஜக உடன் கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால் கடந்த தேர்தலில் 90 முதல் 100 சீட்டுகள் வரை வெற்றி பெற்றிருக்க முடியும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் கனவு. அது ஓரளவு நியாயமானதும் கூட. பாஜகவை எப்படியாவது கழட்டி விட்டால் தான் தமிழகத்தில் எதிர்க்கட்சியாகவாவது செயல்பட முடியும் என்பது அவரது எண்ணமாக இருக்கிறது. 2024 தேர்தலில் ஓரளவு வென்று விட முடியும் என்பதும் அவரது எண்ணமாக இருக்கிறது. தற்போது சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக களத்திலும் எதிர்க்கட்சியாக செயல்பட முடியும் என்பதோடு 2026 தேர்தலில் ஆட்சியையும் படித்து விட முடியும் என நினைக்கிறார்.

விரும்பாத பாஜக
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மக்கள் வாக்குகளை மாற்றி போடுவார்கள். திமுக அடுத்தடுத்து ஆட்சி அமைத்ததில்லை. ஆனால் அதிமுக ஐந்து முறை அதனை செய்திருக்கிறது. 2026இல் தன்னால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என நம்பும் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவை தோளில் சுமப்பதை பெரும் சுமையாக கருதுகிறார். ஆட்சி அமைக்க பாஜக தடையாக இருக்கும் என்பதையும் உறுதியாக நம்புகிறார். இதனால் பாஜகவை அவர் கழட்டி விட நினைக்கிறார். ஆனால் பாஜக அதை ஒருபோதும் விரும்பாது.

ஆதரவாளர்கள்
மூன்று சதவீத வாக்குகளை வைத்திருக்கும் பாஜக 30 சதவீதம் வாக்குகளை வைத்திருக்கும் அண்ணா திமுகவின் தோளின் மீது தான் ஏறி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதனால் அந்த காரியத்தை செய்ய எடப்பாடி பாஜக அனுமதிக்காது. அதை எவ்வளவு தூரம் கெடுக்க முடியுமோ அந்த காரியத்தை பாஜக செய்யும். அது எடப்பாடி மீதான பன்முனை தாக்குதல்களாக இருக்கும் அவரது ஆதரவாளர்களே அவருக்கு எதிராக திரும்புவார்கள். ஓபிஎஸ் போன்ற நபர்களிடமிருந்து வெளியில் இருந்து தாக்குதல் வரும்.

பன்முனை தாக்குதல்கள்
மத்திய விசாரணை அமைப்புகளின் கொடுங்கரங்கள் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி நீளும். இதனால் பன்முனை தாக்குதல்கள் மூலம் எடப்பாடி பழனிச்சாமியை வழிக்கு கொண்டு வர மோடி அரசு முயற்சிக்கும். அதன் தொடர்ச்சியாக தான் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் உள்ளிட்ட நிகழ்வுகளை பார்க்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்துக்கு குஜராத் சட்டசபை பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு கொடுத்ததெல்லாம் அந்த வகையான மெசேஜ் தான்" எனக் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications