எடப்பாடியார் அடித்த "சிக்சர்.."அதிமுகவுக்கு கிடைத்த பிரம்மாஸ்திரம்.. செல்வாக்கு உயர செம சான்ஸ்!
சென்னை: விவசாயிகள் நலன் சார்ந்த அடுத்தடுத்த, அறிவிப்புகளால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயரும் என்ற மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தத்தினர்.
Recommended Video
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ள ஒரு அதிரடி அறிவிப்பு பற்றி தான், இப்போது அதிமுக வட்டாரத்தில் பரவலாக, பரபரப்பாக பேசப்படுகிறது.
இன்றைய அறிவிப்பு மட்டுமல்ல, இதற்கு முந்தைய விவசாய நலன் சார்ந்த அறிவிப்புகளும் அதிமுகவினரால் சிலாகித்து பேசப்பட்டு வருகிறது.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி - முதல்வர் சூப்பர் அறிவிப்பு
தேர்தல் அறிக்கை
தமிழகத்தின் தேர்தல் அறிக்கைகள் இந்தியா முழுக்க உள்ள மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுவது வழக்கம். முதன்முறையாக இலவச கலர் டிவி வழங்குவதாக 2006ம் ஆண்டு திமுக தலைவராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வெற்றிக்கு இந்த தேர்தல் அறிக்கை மிக முக்கிய பங்கு வகித்தது.
ஜெயலலிதாவும் இலவசம் மீது கவனம்
இதையடுத்து, ஜெயலலிதாவும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு ரொம்பவே முக்கியத்துவம் தந்தார். தாலிக்கு தங்கம், இலவச ஆடுகள் வழங்கும் திட்டம், இலவச மடிக்கணினி திட்டம் என அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளும் மாறிமாறி தேர்தல் அறிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்த ஆரம்பித்தன. இந்த தேர்தலிலும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை பக்காவாக தயாரிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகின்றன.
அறிவிப்புகளுக்கு மிகுந்த முக்கியத்துவம்
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருபெரும் ஆளுமைகள் இல்லாத நிலையில், இரு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை மலைபோல நம்பிக்கொண்டு இருக்கின்றன.
விவசாய கடன் தள்ளுபடி
ஆனால், தேர்தலுக்கு பிறகு நிறைவேற்றுவதுதான் தேர்தல் அறிக்கை. தேர்தலுக்கு முன்பே எடப்பாடியார் அதிரடி காட்டப்போகிறார் என்று தகவல் வெளியானது. பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரின் போது, தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பை வெளியிடுவதுதான் அந்த அதிரடி என்றும், இதற்கு எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார் என்றும் கடந்த ஜனவரி 30ம் தேதியே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
சட்டசபையில் அறிவிப்பு
இந்த நிலையில்தான், சட்டசபையில் இன்று அவை விதி எண் 110ன்கீழ், முதல்வர் எடப்பாடி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,000 கோடி மதிப்புள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். கடன் தள்ளுபடி மூலம் 16.13 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இந்த உத்தரவை விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ளன.
முதல்வர் செல்வாக்கு
இந்த அறிவிப்பால், எடப்பாடி பழனிச்சாமிக்கு கிராமப்புறங்களில் மேலும் செல்வாக்கு உயரும். இதைத்தான் எடப்பாடி பழனிச்சாமியும் குறிப்பிட்டுள்ளார். திமுக வாக்குறுதி அளிப்பார்கள். செய்ய மாட்டார்கள். அதிமுக மட்டுமே கொடுத்த வாக்கை காப்பாற்றும் கட்சி என்று சட்டசபையில் முழங்கியுள்ளார் முதல்வர். இதன் மூலம், மண்டலம் பாகுபாடு இல்லாமல் தமிழகம் முழுக்க உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் முதல்வர் உத்தரவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக பொங்கலை முன்னிட்டு தலா 2500 ரூபாய் வழங்கப்பட்ட திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
எடப்பாடியார் உத்தரவுகள்
கொரோனா காலத்தில் பள்ளிகளை திறக்காமல் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்ய உத்தரவிட்டது தாய்மார்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோல மக்கள் மனங்களில் இடம் பெறக்கூடிய பல திட்டங்களையும்.. குறிப்பாக, உடனடியாக பலன் தரக்கூடிய திட்டங்களை கையில் எடுத்து அசத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அந்தவகையில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளது, எடப்பாடி பழனிச்சாமியின் கைகளுக்கு கிடைக்கப் போகும் மாபெரும் பிரம்மாஸ்திரமாக மாறும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இது தேர்தல் அறிவிப்பு என்று யாரும் கடந்து விட முடியாது. ஏனெனில், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான். எனவே தொடர்ந்து விவசாயிகளுக்காக அவர்கள் மனம் குளிர வைக்கும் அறிவிப்புகளை எடப்பாடியார் அறிவித்து வருகிறார் என்கிறார்கள்.