சீனியர் செங்கோட்டையனுக்கு மீண்டும் கல்தா? குமுறும் ஆதரவாளர்கள் - எடப்பாடி டீமில் வெடிக்கும் பூசல்!
சென்னை : அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கு இப்போதும் முக்கிய பதவியை வழங்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஈபிஎஸ் தரப்புக்குள் மெல்ல பூசல் எழத் தொடங்கியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் ஆனால், ஓபிஎஸ் தரப்பினர் வகிக்கும் பதவிகள் பறிக்கப்பட்டு, அந்த பதவிகளை தனது ஆதரவாளர்களுக்கே எடப்பாடி பழனிசாமி வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பதவிகளுக்காக, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான சீனியர்கள் பலர் காய்நகர்த்தி வருகின்றனர். அதில் சிலருக்கு பதவிகள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் செய்திகள் வட்டமடிக்கின்றன.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக இளையராஜாவுக்கு வாழ்த்துகள்- ஓபிஎஸ் அறிக்கை! எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து!
பொதுக்குழுவுக்குப் பிறகு
ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இதன்மூலம் கட்சி தன் கையில் முழுமையாக வருவதால், தனக்கு எதிராகச் செயல்பட்டு நீதிமன்றத்தில் போராடி வரும் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருக்கும் பொருளாளர் பதவியையும் ஈபிஎஸ் பறிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கட்சியில் புதிய பொறுப்புகளுக்கு யார் யாரை கொண்டு வருவது என்கிற பேச்சுகள் தீவிரமாக எழுந்துள்ளன.
பதவிகளுக்கு போட்டி
அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினால், துணை பொதுச் செயலாளர், பொருளாளர், தலைமை நிலையச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளைக் கைப்பற்றுவதற்கு அதிமுகவில் பெரும் போட்டியே நடக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் பலர் இதற்காக முட்டி மோதி வருகின்றனர். பொருளாளராக ஜெயக்குமார் அல்லது கே.பி.முனுசாமி, தலைமை நிலையச் செயலாளராக சி.வி.சண்முகம் ஆகிய பெயர்கள் அடிபடுகின்றன. நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கும் முக்கிய பொறுப்புகள் டிக் ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
செங்கோட்டையனுக்கு
ஆனால், இந்தப் பட்டியலில் செங்கோட்டையனின் பெயர் இல்லை என்று கூறப்படுகிறது. இது செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் சீனியராக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கு முழு ஆதரவு கொடுத்து பின்னால் நிற்கிறார் செங்கோட்டையன், ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தைகளுக்கும் சென்று கட்சியின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டார், அவருக்கு பதவி கொடுக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று செங்கோட்டையன் ஆதரவாளர்கள் குமுறத் தொடங்கியிருக்கிறார்கள்.
கட்சியில் மூத்தவர்
செங்கோட்டையன் 9 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜெயலலிதா ஆட்சியில் முக்கிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர். கொங்கு மண்டல அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு முன்பே குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்ற தலைவராக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ்ஸுக்கு பதிலாக முன்வைக்கப்பட்ட பெயர்களில் முதன்மையானது செங்கோட்டையன் பெயர்.
எடப்பாடி வந்தார்
ஆனால், செங்கோட்டையனுக்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி அந்த இடத்திற்கு வந்தார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கிய பிறகு செங்கோட்டையனின் செல்வாக்கு கொங்கு மண்டலத்திலேயே குறைந்துவிட்டது. செங்கோட்டையனே இதுகுறித்து அதிருப்தியில் இருந்து வருவதாகவே கூறப்பட்டது. ஆனால், பெரிதாக எந்தப் பிரச்சனையும் இதுவரை வெடிக்கவில்லை.
மீண்டும் ஓரங்கட்டுகிறார்
ஜெயலலிதா இருக்கும்போது அ.தி.மு.கவிற்காக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முன்னிருந்து நடத்துபவர் செங்கோட்டையன். ஆனால், எடப்பாடி பழனிசாமி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.கவின் தொகுதிப் பங்கீட்டு குழுவிலேயே அவருக்கு இடம் அளிக்கவில்லை. அப்போதே அவரது ஆதரவாளர்கள் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்தனர். ஈபிஎஸ் தங்களை ஓரங்கட்டுவதாக குற்றம்சாட்டினர்.
Recommended Video
ஈபிஎஸ் அணிக்குள் குட்டி பூசல்
இந்நிலையில், தற்போது கட்சியை எடப்பாடி பழனிசாமி முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்தபிறகும், பக்கபலமாக நின்று ஆதரவாக இருந்து வரும் செங்கோட்டையனுக்கு முக்கிய பதவியை வழங்காமல் ஓரங்கட்டுவது அவரது ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பதவி வாய்ப்பை செங்கோட்டையனிடம் இருந்து பறித்த ஈபிஎஸ், திட்டமிட்டே இவ்வாறு செயல்படுகிறார் என அவரது ஆதரவாளர்கள் குமுறுகின்றனர். இந்த விவகாரத்தில் ஈபிஎஸ் அணிக்குள் ஒரு மினி பூசல் கிளம்பியுள்ளதாகவே கூறப்படுகிறது.