24 மணி நேரத்தில் மின் இணைப்பு...மின் தடை இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக நடவடிக்கை: செந்தில் பாலாஜி
விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் இலவச மின்சாரம் வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளளார். அனைத்து மாவட்டங்களிலும் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான மின் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்பட்டு மின் தடை இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள கப்ளாங்கரை பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆழியார் ஆற்றினை நீர் ஆதாரமாக கொண்டு ரூபாய் 69 லட்சம் செலவில் 212 கிராமங்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கும் வகையில் செயல்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் நேற்று காணொளி வாயிலாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
இதனை நெகமம் அடுத்துள்ள கப்லங்கரை கிராமத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் நேரில் பார்வையிட்டு திட்டத்தின் பயன்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

மின் விநியோக கட்டமைப்பு பணிகள்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் முதல்வர் அறிவுறுத்தலின்படி மின் விநியோக கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 216 புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்காக இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. 73 துணை மின்நிலையங்களுக்கு மட்டும் இடம் தேர்வு செய்ய வேண்டிய பணிகள் உள்ளது. விரைவில் இந்த பணிகள் நிறைவு பெறும் என்று குறிப்பிட்டார்.

மின் தடை இல்லாத மாநிலம்
4000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான மின் உற்பத்தி பூங்கா அமைக்க அந்தந்த மாவட்டங்களில் இடம் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது பணிகள் முடிந்தவுடன் அனைத்து மாவட்டங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு மின் தடை இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

ஒரு லட்சம் இலவச மின்சாரம்
புதிய மின் இணைப்புகள் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் இலவச மின்சாரம் வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மின் இணைப்பு வழங்கும் திட்டம்
இதுவரை 23 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்,32 ஆயிரம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி கூறினார். மீதமுள்ள 45 ஆயிரம் விவசாயிகளுக்கு ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்தவுடன் மார்ச் மாதம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் பூர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications