மாணவர்கள் கவனத்திற்கு.. பொறியியல் கலந்தாய்வு செப்.10ல் தொடக்கம்.. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் பொறியியல் படிக்க விண்ணப்பித்த 1.5 லட்சத்திற்கு அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இடம் பிடித்தவர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு, கடந்த ஏப்ரல் 20ம் தேதி தொடங்கி வரும் 23ம் தேதி வரை நடைபெற்றது.

நீட் தேர்வு முடிவு
அதனைத்தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆக.25 தொடங்கி அக்.21ம் தேதி வரை நடைபெற இருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவுகள் வராததால் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இந்த நிலையில் வரும் செப்.7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

செப்.7ல் கலந்தாய்வு
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு வரும் செப்.10ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், தமிழகத்தில் பொறியியல் இளநிலை படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்.10ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெறும்.

கலந்தாய்வு அட்டவணை
பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. செப்டம்பர் 7-ல் நீட் தேர்வு முடிவு வெளியீடு என அறிவிக்கப்பட்டதால், புதிய கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. அதன்படி, முதல்கட்ட கலந்தாய்வு செப். 10 முதல் 12ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப். 25 முதல் 27ம் தேதி வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக்.13 முதல் அக்.15 வரையிலும், நான்காம் கட்ட கலந்தாய்வு அக்.29 முதல் அக்.31 வரையிலும் நடைபெறும் என்று தெரிவித்தார்.

தமிழ் கட்டாயம்
தொடர்ந்து, ஒவ்வொரு பிரிவிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் . அதேபோல் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீட்டை பெற முடியும். மேலும், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ்ப் பாடம் கட்டாயமாக்கப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications