ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவன், மகன் சஞ்சய் சம்பத்- யார் காங். வேட்பாளர்?
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அல்லது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடக் கூடும் என கூறப்படுகிறது. மேலும் மறைந்த திருமகன் ஈவெராவின் மனைவி பூர்ணிமாவை காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா. அத்தேர்தலில் திருமகன் ஈவெரா, 67,300 வாக்குகள் பெற்றார். தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியின் யுவராஜாவைவிட 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் திருமகன் ஈவெரா.

இந்நிலையில் திருமகன் ஈவெரா திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பிப்ரவரி 27-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஈரோடு(கிழக்கு) சட்டமன்றத் தேர்தல் 2021
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசியலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில், அதிமுகவே போட்டியிடும் என தமாகா தலைவர் ஜிகே வாசன் அறிவித்துள்ளார். ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டதால் அத்தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே திமுக ஒதுக்கி உள்ளது. அதேபோல் ஏற்கனவே போட்டியிட்ட தமாகா இத்தொகுதியில் போட்டியிட விரும்பியது. ஆனால் சென்னையில் ஜிகே வாசனை அதிமுக தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். இதனைத் தொடர்ந்து இன்று ஜிகே வாசன் வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகதான் போட்டியிடும் என அறிவித்தார். இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக இன்று முடிவு ஒன்றை அறிவிக்க உள்ளது.

தற்போதைய நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக- காங்கிரஸ் இடையே போட்டி உறுதியாகி உள்ளது. அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கம் வேட்பாளராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி வேபாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அவரது மற்றொரு மகன் சஞ்சய் சம்பத், மறைந்த திருமகன் ஈவெராவின் மனைவி பூர்ணிமா ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அனுதாப ஓட்டுகள் கிடைக்கும் என்பதால் காங்கிரஸ் வெல்லும் என்பதும் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications