ஈரோடு கிழக்கில் யாருக்கு ஆதரவு..காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுப்பாரா?..ஆலோசிக்கும் கமல்ஹாசன்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவோம் என்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவினை அறிவிப்போம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்களுக்கு நன்மை எது தீமை எது என்று ஆராய்ந்து அதற்கேற்ப முடிவினை அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார் கமல்ஹாசன்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் தீவிரமாக நடந்து வந்தது.

ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக காங்கிரஸ் தேசிய தலைமை நேற்று அறிவித்தது. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதற்கு கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் மக்கள் செல்வாக்கு மிக்க ஒருவரை வேட்பாளராக நிறுத்த அதிமுக திட்டமிட்டுள்ளது, எதிர்கட்சி போட்டியாளர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதால், ஈரோடு மாவட்டத்துக்கு மிகவும் பரிச்சயமான, அரசியல் அனுபவம் மிக்க மூத்த தலைவரை வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்து, ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதுவே முதல்வர் ஸ்டாலினின் விருப்பமாகவும் இருந்தது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்கட்சிக்கு ஆதரவு கோரி, கூட்டணி கட்சித்தலைவர்களை நேரில் சந்தித்து பேசி வருகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை அவரது கட்சி அலுவலகமான ஆழ்வார்போட்டையில் நேரில் சந்தித்து பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், அவரது வரவேற்பு சிறப்பாக இருந்தது. கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி தங்களின் முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கும் அழைத்திருக்கிறோம் என்றும் இளங்கோவன் கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலேசனை நடைபெற்று வருகிறது. எந்த முடிவையும் நானாக எடுக்க முடியாது. நிர்வாகிகளுடன் ஆலோசித்து விரைவில் தெரிவிப்போம்.
மக்களுக்கு எது நன்மையோ அதனை ஆலோசித்து நாங்கள் எங்களின் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் என்றும்
கமல்ஹாசன் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் கடந்த முறை மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார். இதன் காரணமாகவே கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற கை கொடுப்பாரா கமல்ஹாசன் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications