ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..போட்டியில் இருந்து விலகிய சமக..யாருக்கும் ஆதரவு இல்லை..சரத்குமார் அதிரடி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும், யாருக்கும் ஆதரவளிக்க வேண்டாம் எனவும் உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பலமுனைப்போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இந்த முறை அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தது. இதன்படி, அதிமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஓ பன்னீர் செல்வமும் அதிமுக சார்பாக வேட்பாளர் நிறுத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார். இதனால், அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொங்கில் சமகவிற்கு பங்கு இருக்கு.. ஈரோடு கிழக்கு எங்களுக்கே! மாலையே அறிவிப்பு: சரவெடியாய் சரத்குமார்
தேமுதிக இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கூறி வேட்பாளரையும் அறிவித்து விட்டது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சி வேட்பாளர்களை சந்தித்து ஆதரவு கேட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
இந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய அக்கட்சியின் தலைவர் சரத்குமார், இடைத்தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒருவாரத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. அதற்குள் என்ன பண்ணமுடியும் என்று ஆலோசிக்கவே ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள் வருகை தந்து இருக்கிறார்கள்.
சென்ற முறை மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து இந்த தேர்தலை சந்தித்து இருந்தோம். மக்கள் நீதி மய்யம் அப்போது 10,005 வாக்குகள் வாங்கியது. இதில் எங்களது பங்கீடு எவ்வாறு இருந்து இருக்கும் என்று தெரியும். ஈரோடு பகுதியில் மட்டும் அல்ல.. கொங்கு மண்டலத்தை பொருத்தரை நான் ஒருமுறை பிரசாரத்திற்கு சென்ற போது நல்ல வரவேற்பு இருந்தது. இடைத்தேர்தலில் நின்று கிடைத்த அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. அந்த அனுபவத்தை மீண்டும் பெற வேண்டுமா என்ற கருத்துக்களை பரிமாறுவதற்காகத்தான் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. நிச்சயமாக எங்கள் முடிவை அறிவித்துவிடுவோம். கட்சியை தொடங்கினால் எல்லா தேர்தலையும் சந்திக்க வேண்டும் என்பது நமது கடமை. மக்களை சந்தித்து வாக்குகளை பெற்று மக்கள் பிரதிநிதியாக இருந்தால்தான் நினைத்ததை செய்ய முடியும்.
மக்களுக்கு கொடுக்கின்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். ஒரு அரசியல் கட்சிக்கு தேர்தலில் நிற்பது முக்கியமான பணியாகும். காலத்தின் சூழலில் நாம் கூட்டணி வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது. இந்த தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். அவர்கள் நிற்கிறோம் என்று சொன்னால் நாங்கள் போட்டியிடுவதற்கு எந்த ஆட்சேபமும் கிடையாது. பிரசாரம் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்றும் சரத்குமார் நேற்று கூறியிருந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக கூறியதை அடுத்து சரத்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசித்து முழுமையாக ஆய்வு செய்தபின் எடுத்த முடிவு இது என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும், யாருக்கும் ஆதரவளிக்க வேண்டாம் எனவும் உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.