ஈரோடு கிழக்கு..இபிஎஸ் லைனுக்கு வரும் ஓபிஎஸ்..வேட்பாளரை வாபஸ் பெற திட்டம்..பரபர ஆலோசனை
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: பொதுக்குழு கூடி வேட்பாளரை தேர்வு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து அதிமுகவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறுவதற்கான படிவங்கள் வழங்கப்பட்டு வரும் அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் கடந்த ஜூன் மாதம் பொதுக்குழு கூடிய போது மேடை ஏறிய ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களால் அவமானப்படுத்தப்பட்டார். இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் கோபமாக வெளியேறினார். ஜூலை 11ஆம் தேதியன்று மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடியது. அந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினமே ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தான்தான் ஒருங்கிணைப்பாளர் என்றும் தனக்குத்தான் அதிகாரம் இருப்பதாக கூறி மாவட்ட செயலாளர்களை நியமித்து கூட்டமும் நடத்தினார்.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து வழக்கு தொடந்தார். அந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது வாத விவாதங்கள் முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக முகாமில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்னாள் எம்எல்ஏ தென்னரசும், அதேபோன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் என்பவரும் தனித்தனியாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளர் விண்ணப்ப படிவத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற எனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது.
இதனையடுத்து தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளவும் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி புதிய இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையின்போது, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க முடியாது என்று தேர்தல் ஆணையமும், அதேப்போன்று எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மேற்கண்ட இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் எச்.ராய் ஆகியோர் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "எடப்பாடி பழனிசாமியை நாங்கள் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை. அதே நேரத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வமாக ஒருவர் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் சின்னத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் எங்களால் எந்தவித முடிவும் எடுக்க முடியவில்லை என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான குருகிருஷ்ணகுமார், பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால் இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து தான் முடிவெடுக்க முடியும். மேலும் வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தில் ஒங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்தின் கையெழுத்து கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர் விண்ணப்பத்தில் கையெழுத்து கேட்டால் அதனை போடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு தான் எங்களை நிராகரிக்கிறார்கள் என தெரிவித்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமாசுந்தரம், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்க முடியாது என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,அதிமுகவை பொறுத்தமட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சியில் பொதுக்குழுவே வேட்பாளரை முடிவு செய்யும். மேலும் பொதுக்குழு கூட்டப்படும் போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உட்பட ஆகியோர் கலந்து கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
நேரமின்மை காரணமாக ஒரு வேளை பொதுக்குழுவை திடீரென கூட்ட முடியவில்லை என்றால் வேட்பாளர் பெயரை சர்குலேஷன் முறையில் அதாவது தீர்மானத்தை சுற்றுக்கு விட்டு முடிவு செய்யலாம். இதையடுத்து இறுதி செய்யப்படும் வேட்பாளரின் பெயரை கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த உத்தரவு ஈரோடு கிழக்கு இடைதேர்தலுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது என உத்தரவிட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடைக்கால மனு மீதான விசாரணையை முடித்து வைத்தனர்.
இந்த உத்தரவை அடுத்து இரண்டு அணி முகாமிலும் மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கள் தரப்பு நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, எம்.சி.சம்பத்
செம்மலை, எம்.சி. சம்பத், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம், காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தென்னரசு ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாகவும், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இரண்டு ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவங்களை கொடுத்து நாளை இரவுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது வீட்டில் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். தனது தரப்பு வேட்பாளர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவை வாபஸ் பெற வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடந்த 8 மாத காலமாக அதிமுகவில் மாறி மாறி ஏற்பட்டு வந்த பஞ்சாயத்து படிப்படியாக முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.