வாசனுக்கு கொஞ்சம் மனசாட்சி இருக்கு.. அவரே அவருக்கு ஓட்டு போட மாட்டார்.. கலாய்த்த இளங்கோவன்!
சென்னை: ஜி.கே.வாசனுக்கு கொஞ்சம் மனசாட்சி இருக்கிற காரணத்தால் அவரே அவருக்கு ஓட்டு போட மாட்டார், அவரை கூட்டிச் சென்று பாஜக கூட்டணி கட்சி என கூட்டம் நடத்துகிறார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் பெங்களூரில் கூடி 2வது ஆலோசனைக் கூட்டம் நடத்தி தங்கள் கூட்டணிக்கு INDIA - இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என பெயர் சூட்டிய அதே நாளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக மூத்த தலைவர் ஏ.கே.மூர்த்தி, ஐஜேகே நிறுவனர் பச்சமுத்து, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளில் 26 கட்சிகளுக்குமே ஒரு எம்.பி கூட இல்லை. 8 கட்சிகளுக்கு வெறுமனே ஐந்திற்கும் குறைவான எம்பிக்களே உள்ளனர், அவர்களில் பெரும்பாலும் 1 எம்பிக்களை மட்டுமே உள்ளனர். இதனை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், "350 சீட்களில் அவர்களால் ஜெயிக்க முடியாது. 350 இடங்களில் வெற்றிடத்தைத்தான் காணப் போகிறார்கள். பாஜக கூட்டணி இன்னும் ஒன்றுசேரவே இல்லை. மோடி கூட்டணியில் இருக்கும் கட்சிகளைப் பாருங்கள்.
தமிழ்நாட்டில் ஒரே நபரை மட்டுமே தலைவராகவும் தொண்டனாகவும் கொண்டிருக்கும் கட்சி ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. அவரைக் கூட்டி வந்து கூட்டணி கட்சி என்று சொல்கிறார்கள். வாசனுக்கு அவர் வீட்டிலேயே ஓட்டு போடுவார்களா எனத் தெரியவில்லை. ஜி.கே.வாசனுக்கு கொஞ்சம் மனசாட்சி இருக்கிற காரணத்தால், அவரே கூட அவருக்கு ஓட்டு போட மாட்டார்." என கிண்டல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications