வேணும்னா சசிகலாவை பாஜகவில் சேர்த்துக்கோங்க.. அதிமுகவுக்கு அண்ணாமலை என்ன அட்வைசரா? ஜெயக்குமார் நறுக்
சென்னை: சொந்த கட்சி வேலைகளை அவர் பார்க்கட்டும். அவர் என்ன அதிமுகவுக்கு அட்வைசரா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுகவில் சசிகலாவை இணைப்பதா வேண்டாமா என்ற பிரச்சினை எழுந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை சேத்துப்பட்டில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
அப்போது ஓபிஎஸ் பேசுகையில் திருந்தி வந்தவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு என கூறியிருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

குட்டி கதையுடன் கருத்துகள்
இந்த விழாவில் ஓபிஎஸ் ஒரு குட்டி கதையுடன் சில கருத்துகளை கூறியிருந்தார். அவை சசிகலாவை மையப்படுத்தி பேசியதாகவே அரசியல் வட்டாரத்தில் சொல்லப்பட்டது. இதுகுறித்து டி ஜெயக்குமார் பிபிசி தமிழுக்கு பேட்டி அளித்திருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
அப்போது அவர் கூறுகையில் ஓபிஎஸ் சொன்ன கருத்துகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூறியதாக எடுத்துக் கொள்ள முடியாது. அது கிறிஸ்துமஸ் பெருவிழா. மன்னிக்கிற மனப்பாங்கை மனித குலம் பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் அவர் பேசியிருந்தார். அதற்கு ஒரு உருவத்தை வைத்து பேசுவதை ஏற்க முடியாது.

தேவர் ஜெயந்தி விழா
இயேசுபிரான் செய்த உபதேசங்களைத்தான் அவர் கூறிருந்தார். தேவர் ஜெயந்தி விழாவில் ஓபிஎஸ் பேசியது குறித்தும் அவர் தலைமை அலுவலகத்தில் விளக்கமளித்துவிட்டார் என்றார். இந்த நிலையில் பழைய அதிமுகவாக ஒற்றுமையாக இருப்பதற்கு சசிகலாவையும் சேர்த்துக் கொள்ளலாம், அது தொண்டர்கள் விருப்பம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊடக நேர்காணல் ஒன்றில் கூறியதாக வெளியான செய்திகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

வேலை பார்க்கட்டும்
அதற்கு அவர் அண்ணாமலை தனது கட்சி வேலையை பார்க்கட்டும். எங்கள் விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. சசிகலாவை கட்சியில் சேர்க்குமாறு அறிவுரை கொடுக்க இவர் யார்? இவர் என்ன எங்களிடம் அட்வைசரா? அவரவர் வேலையை அவரவர் பார்க்கட்டும். பா.ஜ.கவில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கிறார்கள். அது பற்றி நாங்கள் பேசுகிறோமா? சசிகலாவை வேண்டுமானால் பா.ஜ.கவில் சேர்த்துக் கொள்ளட்டும். அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை என்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications