ஒற்றை அறிவிப்பு! தமிழகமே முதல்வரை வரவேற்கிறது.. திடீரென பாராட்டி தள்ளிய ஆர்பி உதயகுமார்-என்ன காரணம்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு மீண்டும் 20 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.
இந்தியாவில் தினசரி கேஸ்கள் அதிகம் உள்ள டாப் 5 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இதனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Chennai Rain: பனியில்லாத மார்கழி.. குளிரில்லாத தை.. திடீரென சென்னையில் இன்று பெய்த மழை..!
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
அதன்படி தமிழ்நாட்டில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல திரையரங்குகள் உள்ளிட்ட பொழுது போக்கு இடங்களில் மக்கள் ஒன்று கூட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிரக் கடந்த இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசியப் பணிகளைத் தவிரத் தேவையின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது என்றும் அப்படி வருவோர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆர்.பி.உதயகுமார்
முழு ஊரடங்கு காரணமாக சில இடங்களில் சாலையில் வசிக்கும் மக்கள் உணவின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் அப்படி உணவில்லாமல் இருந்தவர்களுக்குப் பல தன்னார்வலர்கள் உதவினர். மதுரை ரயில் நிலையம் அருகே அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில், சாலையோரம் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு வழங்கினார்.
தமிழகமே வரவேற்கிறது
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "முழு ஊரடங்கு சமயத்தில் ஏழை, எளியவர்களின் நலன் கருதி அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா உணவகம் தங்கு தடையின்றி செயல்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதைத் தமிழ்நாடே வரவேற்கிறது. நாங்களும் வரவேற்கிறோம். இதற்காக அவருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
அம்மா உணவகம்
பொதுவாக ஆட்சி மாறினால் முந்தை அரசின் திட்டங்கள் அப்படியே கிடப்பில் போடப்படும். அல்லது குறைந்தபட்சம் திட்டத்தின் பெயர்களாவது மாற்றப்படும். அப்படி தான் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றான அம்மா உணவகம் மூடப்படும் எனத் தகவல் பரவியது. தமிழகம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் இத்திட்டத்தால் பெரியளவில் பயன் பெறுவதால் இத்திட்டத்தைக் கைவிடக் கூடாது என்ற கோரிக்கையும் மறுபுறம் அதிகரித்தது. இந்தச் சூழலில் தான் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் எனச் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.