அதிமுகவுக்கு "நல்ல அங்கீகாரம்.." இதுக்கு மேலயும் பாஜகவுடன் கூட்டணி அவசியமா?.. கேசி பழனிச்சாமி
சென்னை: இதற்கு மேலும் பாஜகவுடனான கூட்டணி அவசியம் தானா என முன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமி அதிமுக தலைமையை கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி வேண்டும் என கூறி நேற்றைய தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை - குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று
அப்போது அந்த நிகழ்வில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், சட்டசபையில் ஆண்மையோடு பேச ஒரு அதிமுக எம்எல்ஏ கூட இல்லை. எதிர்க்கட்சியாக இல்லையென்றாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டிக் கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே என அவர் கூறியிருந்தார்.
நயினார் நாகேந்திரன்
இந்த கருத்துகள் அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் உள்ளவர்கள் எல்லாம் நயினார் நாகேந்திரனையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்தனர். அதில் ஐடி விங்கின் மதுரை மண்டல செயலாளர் ராஜ சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் நீங்கள் வேண்டுமானால் அதிமுக தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனித்து போட்டியிட்டு ஆண்மையை நிரூபியுங்களேன். ஆண்மை என்பது சொல் அல்ல, செயல் என காட்டமாக தெரிவித்தார்.
தனித்து போட்டி
அது போல் ஐடி விங்கின் செயலாளர் சிங்கை ராமசந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைப்பிடிப்பது போல் அதிமுகவின் தயவால் சட்டசபையில் நுழைந்து தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்துள்ள அதிமுகவுக்கு அரசியல் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆண்மையோடு தனித்து நில்லுங்கள் என விமர்சித்திருந்தார்.
நயினார் நாகேந்திரன் விளக்கம்
இந்த நிலையில் நயினார் நாகேந்திரனோ அதிமுக பற்றிய என்னுடைய கருத்துகள் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் கூறிய கருத்துக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம் என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிமுக எம்பி கேள்வி
இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இதுவரை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததற்கு பரிசாக, ஆண்மையற்றவர்கள் என்ற அங்கீகாரத்தை தற்போது #பாஜகவுக்கு அளித்துள்ளது. இதற்கு மேலும் பா.ஜ.க.வுடனான கூட்டணி அவசியம் தானா? என கேள்வி எழுப்பியுள்ளார்.