எங்க அண்ணன் மேல கேஸ் போடுங்க பார்ப்போம்..போட்டு கொடுத்த நெட்டிசன்ஸ்! இர்பானுக்கு ஃபைன் போட்ட போலீஸ்
சென்னை: போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் பிரசாந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது பேசு பொருளான நிலையில், பிரபல யூட்யூபர் இர்பான் ஹெல்மெட் அணியாமலும் முறையின்றி நம்பர் பிளேட் உடன் உயர்ரக இருசக்கர வாகனத்தில் உலா வந்த வீடியோ சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் இர்ஃபானுக்கு 1500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் சென்னை போக்குவரத்து காவல்துறையினர்.
தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டில் தெரிந்து கொண்டதோடு அதனை வீடியோவாகவும் வெளியிட்டார் பிரபல யூட்யூபரான இர்ஃபான். அவரது இர்பான்ஸ் வியூ யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியான கடும் சர்ச்சையானது.

அதே நேரத்தில் இதுபோன்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து அதை பொதுவெளியில் வெளியிடுவது தவறு என்றும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கும் இர்பானுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் கருவின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி குற்றம் எனவும், விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை எச்சரித்தது. இதற்கு இர்பான் மன்னிப்பு கோரிய நிலையில், அந்த விவகாரம் அத்தோடு முடிந்து போனது.
இந்நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் இர்பான். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் பிரசாந்த் தனது அந்தகன் படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். இதற்காக அந்த சேனலின் தொகுப்பாளிணியுடன் பாண்டி பஜார் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் உலா வந்தபடி பேட்டியளித்தார். இருவரும் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததாக புகார் எழுந்தது.
இதை எடுத்து போக்குவரத்து விதிகளை மீறியதாக இருவருக்கும் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த புகைப்படங்களை சென்னை போக்குவரத்து காவல்துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்டது. ஆனால் பிரசாந்த் ஓட்டி வந்த வாகனத்தின் எண்ணுக்கு பதிலாக வேறொருவரின் எண்ணை குறிப்பிட்டு இருப்பதாக புகார் எழுந்தது. அதுமட்டுமல்லாமல் வாகனத்திற்கும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரபல யூட்யூபரான இர்ஃபான் உயரக இருசக்கர வாகனம் ஒன்றில் டெஸ்ட் டிரைவ் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வாகனத்தின் நம்பர் பிளேட் விதிகளை மீறி இருப்பதாகவும், இர்பான் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து பிரசாந்துக்கு ஒரு நீதி, இர்ஃபானுக்கு ஒரு நீதியா? என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது.
மேலும் இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர்,"டூவீலர் விதிகள் சாமானியர்களுக்கு மட்டுமா? ஒரு பிரபல யூட்யூபர் இதுபோல விதிமுறைகளை மீறும் போது நடவடிக்கை இருக்காதா? இல்லை நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு தெரியப்படுத்தலாமே!" என பதிவிட்டிருந்தார்.
இதை அடுத்து அந்த வாகனத்தின் எண்ணை வைத்து அபராதம் வித்து இருக்கின்றனர் சென்னை போக்குவரத்து காவல்துறையினர். அதாவது விதி மீறிய நம்பர் பிளேட்டுக்காக 500 ரூபாய் அபராதமும், ஹெல்மெட் அணியாததற்காக இருப்பானுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் என மொத்தம் 1500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர். மேலும் பைக்கின் நம்பர் பிளேட் மாற்றப்பட்ட புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications