"பாசிசம்'".. 'தமிழகத்தில் வாய்ப்பூட்டு சட்டம் அமலில் உள்ளதா?'.. அதிமுக இன்பதுரை விமர்சனம்
சென்னை: தமிழகத்தில் வாய்ப்பூட்டு சட்டம் அமலில் உள்ளதா? என்றும்.. முதல்வருக்கு எதிராக எவரேனும் மூச்சுவிட்டால் கூட போலீஸுக்கு மூக்கு சிவக்கிறதே? என்றும் அதிமுக முன்னாள் எம்.எல். ஏ இன்பதுரை ட்வீட் பதிவிட்டுள்ளார்.
அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கருத்துகள் தொடர்ச்சியாகச் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் இருந்து வருகிறது.
ஏற்கனவே இது தொடர்பாக அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே தமிழக போலீசார் இன்று காலை அவரை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு?
வலதுசாரி ஆதாரவாளராகவும் அரசியல் விமர்சகராகவும் அறியப்படுபவர் கிஷோர் கே சுவாமி. இவர் சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் ஏற்கனவே கைதாகி, விடுவிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் குறித்து கிஷோர் கே சுவாமி அவதூறு கருத்துகளை பரப்பியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் கடந்த 1ஆம் தேதி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

போலீஸ் நோட்டீஸ்
அதை விமர்சிக்கும் வகையில் கிஷோர் கே சுவாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டு இருந்தார். அவதூறு பரப்பும் வகையில், இந்த கருத்து இருப்பதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி கிஷோர் கே சுவாமிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். நவம்பர் 5, 7, 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

கிஷோர் கே சுவாமி கைது
எனினும், கிஷோர் கே சாமி விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைதாகக் கூடும் எனக் கருதிய கிஷோர் கே சுவாமி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், புதுச்சேரியில் வைத்து கிஷோர் கே சுவாமியை போலீசார் இன்று காலை செய்தனர்.

வாய்ப்பூட்டு சட்டம் அமலில் உள்ளதா?
இந்த நிலையில், ராதாபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவும் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவை சேர்ந்தவருமான இன்பதுரை, தமிழகத்தில் வாய்ப்பூட்டு சட்டம் எதுவும் போடப்பட்டுள்ளதா என ட்விட்டரில் காட்டமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக இன்பதுரை தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- "தமிழகத்தில் வாய்ப்பூட்டு சட்டம் அமலில் உள்ளதா? முதல்வருக்கு எதிராக எவரேனும் மூச்சுவிட்டால் கூட போலீஸுக்கு மூக்கு சிவக்கிறதே? அரசுக்கு எதிராக தவறாக பேசுபவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள். தப்பில்லை! அதுதான் சட்டம். ஆனால் சிறையிலடைத்துத்தான் விசாரிப்போம் என்பது பாசிசம்!" என தெரிவித்துள்ளார்.

கைதை கண்டிக்கும் வகையில்
அதிமுகவுக்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் கிஷோர் கே சுவாமி பதிவிட்டு வருவது வழக்கம். இதனால்,கிஷோர் கே சுவாமி கைதை கண்டிக்கும் வகையில் இன்பதுரை தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டு இருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications