சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில்.. நவ.10 முதல் பயணிக்கலாம்.. என்னென்ன வசதிகள்
சென்னை: நாட்டின் 5ஆவது வந்தே பாரத் ரயில் சென்னை மைசூரு இடையே நவம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் ஓடத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயங்கத் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி - வாரணாசி, டெல்லி -ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா மற்றும் காந்தி நகர் - மும்பை இடையே வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இமாசல பிரதேசத்தில் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் 52 நொடிகளில் 100 கி.மீட்டர் வேகத்தை எட்டும்.
இந்த நிலையில் தென்னிந்தியாவில் சென்னையில் 5வது வந்தே பாரத் ரயில் நவம்பர் 10ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

வந்தே பாரத் ரயில்
ரயிலின் வேகத்தை அதிகரித்து, பொதுமக்களுக்குத் தேவையான பல்வகை வசதிகளைக் கொண்டு ஐ.சி.எஃப்-ல் வடிவமைக்கப்பட்டதுதான் வந்தே பாரத் விரைவு ரயில் (Vande Bharat Express) என அழைக்கப்படும் ரயில் 18 (Train-18). ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலை (Integral Coach Factory) ஐ.சி.எஃப் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால், கடந்த 1955-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் தொடங்கப்பட்டது. ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் இந்த தொழிற்சாலை சென்னை, பெரம்பூரில் அமைந்திருக்கிறது.

விரைவு ரயில்
இங்குதான் வந்தே பாரத் விரைவு ரயில் உருவாகப்படுகிறது. இந்தியாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் 2018ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் உள்ள மொராதாபாத்தில் நடந்த சோதனை ஓட்டத்தில் வெற்றி கண்டது. இதனால்தான் ட்ரைன்-18 என்னும் மறுபெயர் இந்த ரயிலுக்குக் கிடைத்தது. முதல் வந்தே பாரத் ரயில் டெல்லியில் தொடங்கி வாரணாசி வரையிலும் செல்லும் இடையில் கான்பூரிலும் அலகாபாத்திலும் மட்டுமே நிற்கும்.

வந்தே பாரத் விரைவு ரயிலின் சிறப்பம்சங்கள்
ஒரு சர்வதேச விமானம் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு வசதிகளைக் கொண்டிருக்கிறது. இந்த ரயில் முழுவதும் இந்தியாவில் 18 மாதங்களிலேயே தயாரிக்கப்பட்டது. இது இந்திய ரயில்வே துறையின் ஒரு மைல் கல். இந்தியாவின் முதல் இஞ்ஜின் இல்லா ரயில். இது ஒரு சுய உந்துதல் ரயில் (Self propelled). ஒரு மணி நேரத்துக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும். அதாவது, டெல்லியிலிருந்து 752 கி.மீ தூரத்தில் உள்ள வாரணாசியை 8 மணி நேரத்தில் கடந்து விடும். இந்தியாவில் அனைத்து ரயில்களையும்விட அதி வேகத்தில் செல்லக்கூடிய ரயிலாகும்.

16 பெட்டிகள்
மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் 2 பெட்டிகள் நிர்வாகிகள் பெட்டிகளாகவும் (Executive Coach) மீதிமிருக்கும் 14 பெட்டிகள் அனைவரும் செல்லும் பெட்டிகளாகவும் (Economic Coach) இருக்கும். இருக்கைகள் அதிக தரத்துடன் குஷன் சீட்டுகளைப் போல இருக்கும். மேலும், நிர்வாகிகள் பெட்டிகளில் உள்ள இருக்கைகள் 360 டிகிரி திருப்பிக் கொள்ளும் வசதியைக் கொண்டிருக்கும். அனைவரும் பொது போக்குவரத்தில் எதிர்பார்க்கும் வசதிகளுள் ஒன்றான கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து பெட்டிகளிலும் பொருத்தப்பட்டிருக்கும். பொதுமக்கள் மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் நவீன கழிப்பிட வசதி உள்ளது.

தானியங்கி கதவுகள்
இந்த ரயில் தானியங்கி கதவுகளால் ஆனது. அதாவது ரயில் நிலையத்துக்கு வந்ததும் கதவுகள் தானாகத் திறக்கப்பட்டு, புறப்படும்போது மூடிக்கொள்ளும் வசதிகளைக் கொண்டது. இதில் உள்ள படிக்கட்டுகளும் உள்ளிழுக்கும் வசதியைக் கொண்டது, இதுவும் ரயில் நிலையம் வந்ததும் வெளி வரும்செல்லும்போது மூடிக்கொள்ளும். இந்த படிக்கட்டுக்கள் மாற்றுத்திறனாளிகளும் சுலபமாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், ரயிலுக்குள் ஒரு பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்குச் செல்ல தானியங்கி கதவுகள் இருக்கும்.

என்னென்ன வசதிகள்
ரயில் மொத்தமும் குளிர் சாதன வசதி (AC), வை-ஃபை(WI-FI), ஜி.பி.எஸ்.(G.P.S), போன்ற நவீன வசதிகளும், அனைத்து பெட்டிகளின் இருபுறங்களும் எல்.சி.டி திரைகளில் ரயில் வழித்தடம், இருக்கும் இடம் முதலிய அனைத்து விவரங்களும் காட்சிப்படுத்தப்படும். அனைத்து பெட்டிகளின் மையத்தில் விளக்குகள் இருக்கும். அது தவிர விமானங்களில் இருக்கும் பிரத்யேக வசதிகளுள் ஒன்றான தனி நபர் விளக்குகளும் இருக்கும். இதனால் மற்ற பயணிகளுக்கு இடையூறுகள் இல்லாமல் நம் வேலைகளைச் செய்து கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications