பிளாஸ் பேக் 2021: ஆட்சியை பிடித்த திமுக... ரஜினி அரசியல் ஓய்வு - தமிழகம் டாப் 10 பரபரப்பு
சென்னை: தமிழகத்தில் பரபரப்புக்கு என்றைக்கும் பஞ்சமிருக்காது. 2021ஆம் ஆம் ஆண்டில் மிகப்பெரிய சம்பவங்கள் தமிழக அரசியலில் நிகழ்ந்துள்ளன. 10ஆண்டு காலம் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது. திமுக ஆட்சிக்கட்டிலில் ஏறியது மு.க ஸ்டாலின் முதல்வரானார். உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக எம்எல்ஏவானார்.
உடல்நலக்குறைவால் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசன் தோல்வியடைந்தார். அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தைக் கலைத்தார்.
சசிகலா சிறை விடுதலை தொடங்கி போயஸ் கார்டனை ஜெ.தீபா கைப்பற்றியது வரைக்கும் தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நிகழ்ந்த டாப் 10 அரசியல் சம்பவங்களைப் பார்க்கலாம்.

சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் விடுதலையானார். கொரோனா தொற்றினால் ஓய்வில் இருந்த சசிகலா பிப்ரவரி மாத தொடக்கத்தில் தமிழகம் வந்தார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தீவிர அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா மார்ச் மாதத்தில் அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக கூறி அறிக்கை வெளியிட்டார். ஆன்மீக பயணம் கிளம்பிய சசிகலா யு டர்ன் அடித்து அதிமுக பிரமுகர்களுடன் செல்போனில் பேசினார். ஆடியோ ரிலீஸ் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

திமுக உடன் கை கோர்த்த மதிமுக
சட்டசபைத் தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்தது மதிமுக. 15 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கூட்டணியுடன் இணைந்தது மதிமுக. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார் பொதுச்செயலாளர் வைகோ. தேர்தல் பிரச்சாரத்தின்போது கள்ள உறவில் பிறந்த குறை பிரசவ குழந்தை இபிஎஸ் என திமுக எம்.பி. ஆ.ராசா பேசியது சர்ச்சையானது. கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கேட்டார்
அ.ராசா. ஒரே ஒரு செங்கலை வைத்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பை கிளப்பினார் உதயநிதி.

முதல்வர் மு.க. ஸ்டாலின்
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றது. ஆளும்கட்சியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரியணை ஏறியது திமுக. மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக எம்எல்ஏவானார். இந்த காட்சியை ஆனந்த கண்ணீரோடு ரசித்தார் துர்கா ஸ்டாலின்.

பாஜகவிற்கு 4 எம்எல்ஏக்கள்
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. 4 பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு எம்எல்ஏக்களாக நுழைந்தனர். வெற்றிக்கு காரணமாக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி பரிசாக கிடைத்தது. அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

ரஜினி பரபரப்பு
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் ஜூலை 12ஆம் தேதியன்று அறிவித்தார். கால சூழலால் நினைத்தது சாத்தியப்படவில்லை என்று குறிப்பிட்ட ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். இனி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அணிகள் எதுவும் இன்றி, ரசிகர் நற்பணி மன்றமாக மட்டுமே செயல்படும் என்று அறிவித்தது பரபரப்பானது.

பரபரப்பு வீடியோ
தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவனின் பாலியல் வீடியோ இணையத்தில் வெளியாகி தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கே.டி.ராகவன் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்

திமுக அமோக வெற்றி
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6, 9 ஆம் தேதிகளில்2 கட்டங்களாக நடைபெற்றது
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

குறவர் இருளர் சமூகத்திற்கு ஒளியேற்றிய அஸ்வினி
கோயில்களில் அன்னதானத்தில் அவமதிக்கப்படுவதாக நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த 21 வயதான அஸ்வினி என்ற பெண் அளித்த பேட்டியின் எதிரொலியாக, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நரிக்குறவப் பெண் அஸ்வினியுடன் அமர்ந்து கோயில் அன்னதான உணவை உண்டார். நவம்பர் 4ஆம் தேதியன்று நரிக்குறவ பெண் அஸ்வினி வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்; குறவர் மற்றும் இருளர் பழங்குடியின மக்களுக்கான 4.5 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

போயஸ் தோட்டத்தில் பரபரப்பு
டிசம்பர் 6ஆம் தேதியன்று அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். டிசம்பர் 7ஆம் தேதியன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்றார் சசிகலா. அண்ணாத்தே பட ரிலீஸ் நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்த ரஜினியிடம் நலம் விசாரித்தார் சசிகலா.

கெத்தாக போஸ் கொடுத்த தீபா
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் சாவி அவரது அண்ணன் பிள்ளைகள் ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயலலிதா உயிரோடு இருந்த போது பால்கனியில் நின்று கையசைத்து போஸ் கொடுத்த அதே இடத்தில் நின்று கெத்தாக போஸ் கொடுத்தார் தீபா.
Recommended Video

ரெய்டில் சிக்கிய மாஜிக்கள்
நடிகை கொடுத்த பாலியல் புகாரில் மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கே.சி.வீரமணிஅதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது தமிழகத்தில் 2021ஆம் ஆண்டில் மிக பரபரப்பாக
பேசப்பட்டது.












Click it and Unblock the Notifications