விஸ்வரூபமாகும் Vj சித்ரா மரணம்..! என்னயவே ஏன் கேக்குறீங்க! கடுப்பான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
சென்னை : சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் கேள்வியை காவல்துறையிடம் தான் கேட்க வேண்டும் என்னிடம் கேட்கக்கூடாது எனவும், நான் ட்ரெண்டிங்கில் இருப்பதால் என்னை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாகப் பேசினார்.
பிரபல சீரியல் நடிகை சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சித்ரா தற்கொலை செய்துகொள்ள அவரின் கணவர் மற்றும் தாய் கொடுத்த மனஅழுத்தமே காரணம் என காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பவுர்ணமியில் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பகுத்தறிவு திமுக: முன்னாள் ஜெயக்குமார் கிண்டல் !
நடிகை தற்கொலை
அடுத்தடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மதுபோதையில் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று சித்ராவுடன் பிரச்னை செய்தது அம்பலமாகியுள்ளது. அதனால், ஹேம்நாத்தை விட்டு பிரிந்து வருமாறு தாய் விஜயா சித்ராவிடம் தெரிவித்தாகவும், இருவரால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறினர். சித்ராவின் செல்ஃபோனில் இருந்த SMS, புகைப்படங்கள், ஆடியோ போன்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பலத்த சர்ச்சை
இந்நிலையில் அரசியலில் முக்கிய அந்தஸ்தில் உள்ள சிலருக்கு சித்ராவின் மரணத்தில் தொடர்பு உள்ளது. சித்ராவின் தற்கொலைக்கு பின்னால் பண பலம், அரசியல் பலம் கொண்ட மாஃபியா கும்பல் இருக்கிறது. அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தினால், என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அந்த கும்பல் மிரட்டுகிறது. என் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கும் வரை நான் உயிரோடு வாழ விரும்புகிறேன். எனவே, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஹேம்நாத் போலீசில் புகார் அளித்தார்.
ஜெயக்குமார் ஆவேசம்
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சித்ரா மரணத்தில் தொடர்பிருப்பதாக கூறப்படும் நிலையில், இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியால் முன்னாள் அமைச்சர் ஆவேசமடைந்தார். 5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் சின்னத்திரை நடிகை விஜே சித்ரா மரணம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
வியாபாரம் செய்ய வேண்டாம்
இதனால் திடீரென ஆவேசமடைந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,"இந்தக் கேள்வியை காவல்துறையிடம் கேட்க வேண்டும், என்னிடம் கேட்கக்கூடாது. நான் ட்ரெண்டிங்கில் இருப்பதால் என்னை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம்" என கோபமாக பதிலளித்தார். பின்னர் ஒருவாராக சமாளித்த அவர் வேற கேள்விகளை கேளுங்க என சாமாதானம் செய்வது பேசி மற்ற கேள்விகளுக்கு பதிலளித்தார்.