பக்கத்திலேயே நின்ற டாக்டர்.. தண்ணீர் கொடுத்து.. விசிறிவிட்டு - வீட்டில் நலமாக இருக்கும் ஈபிஎஸ்!
சென்னை : அதிமுக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டபோது, மருத்துவரான முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவம் உடனடியாக தண்ணீர் கொடுத்து விசிறிவிட்டார்.
Recommended Video
சென்னையில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.
மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அருகில் நின்றிருந்த டாக்டர் வி.பி.பி.பரமசிவம் உள்ளிட்டோர் ஈபிஎஸ்ஸுக்கு தண்ணீர் கொடுத்து மேடையிலேயே சிறிது நேரம் அமர வைத்தனர்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு
மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று அதிமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் நின்று பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

மு.க.ஸ்டாலினுக்கு சவால்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு நல்லது செய்வதை விட்டுவிட்டு அதிமுகவை அழிக்கப் பார்க்கிறார் என்று குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க அதிமுகவை அழிக்க நினைத்தபோது எல்லாம் வீறுகொண்டு எழுந்து ஆட்சியைப் பிடித்ததே அ.தி.மு.கவின் வரலாறு. கருணாநிதியால் கூட அதிமுகவை அழிக்க முடியவில்லை, ஸ்டாலினால் முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

கண்டன முழக்கம்
தொடர்ந்து, திமுக அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். எடப்பாடி பழனிசாமியும் முழக்கமிட்டபடி இருந்தார். கடுமையான வெயில் காரணமாகவும், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாலும், சோர்வடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. கண்கள் இருட்ட, நிற்க முடியாமல் தடுமாறினார் எடப்பாடி பழனிசாமி.

நிற்க முடியாமல் திரும்பினார்
எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் இருந்தவர்களும் இதனை கவனிக்காத நிலையில், அவரே பின்னால் திரும்பி, தனக்கு மயக்கமாக வருவதைச் சொல்ல முயன்றார். உடனடியாக அருகில் இருந்த வி.பி.பி.பரமசிவம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமிக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்து, முகத்திலும் தண்ணீர் தெளித்து மேடையிலேயே, காற்றோட்டம் வரும் வகையில் அமர வைத்தனர்.

டாக்டர் பரமசிவம்
மணப்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவும் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எடப்பாடி பழனிசாமிக்கு சில அடி தூரத்திலேயே நின்று கொண்டிருந்தார். எடப்பாடி பழனிசாமி தனக்கு லேசான மயக்கம் ஏற்பட்டு பின்னால் திரும்பியதுமே, உடனடியாக அவருக்கு விசிறி விடச் செய்து தண்ணீர் கொடுத்து, ஓய்வு எடுக்க வேண்டும் எனச் சொல்லி, காரை வரவழைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

நலமுடன் இருக்கிறார்
ஆர்ப்பாட்டம் நடந்த மேடையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அங்கிருந்தவர்களிடம் வெயிலால் டயர்டு ஆகிவிட்டார் என விளக்கினார் டாக்டர் வி.பி.பி.பரமசிவம். வீட்டுக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி தற்போது நலமுடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, திண்டுக்கல் சீனிவாசனுக்கும், முன்னாள் எம்.பி விஜயகுமாருக்கும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் சீனிவாசன் மேடைக்கு பின்னால் அமர வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications