9 ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்ட நாள்-ட்விட்டரில் பறக்கும் 'விஸ்வாசம்'!
சென்னை: திமுகவில் இருந்து 9 ஆண்டுகளுக்கு முன்னர் அக்கட்சியின் தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நாள் இன்று. இந்த நாளில் மு.க.அழகிரி ட்விட்டர் பக்கத்தில், கட்சிக்கு விசுவாசமாகவே இருப்பேன் என பதிவிட்டிருப்பதை அவரது ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
2014-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி அன்று திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராயப் பேதங்கள், கோபதாபங்கள் இவைகளைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் கட்சியின் தலைமைக் கழகத்தில் இருக்கின்ற நிலையில்; தங்கள் எண்ணங்களை வெளியிடவும், கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்காமல் காப்பாற்றவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கட்சி அமைப்புகளைக் கலந்து பேசாமலும், அந்த அமைப்புகளை மதிக்காமலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, திமுக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க அழகிரி முயற்சித்தார். கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கட்சிக்காரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி இனியும் தொடர்ந்து கட்சியில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும் - அது திமுகவின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும் - , தி.மு.கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் அழகிரி தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்திருந்தார்.
திமுக தலைவராக கருணாநிதி இருந்த காலத்திலேயே அவரது மூத்த மகன் மு.க. அழகிரி, திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக தலைமையை மிக கடுமையாக மு.க.அழகிரி விமர்சித்து வந்தார்.
இதனால் 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந் தேதி திமுகவில் இருந்து நிரந்தரமாகவே மு.க.அழகிரி நீக்கப்பட்டார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், மு.க.அழகிரி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததனால், கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், கழகத் தலைமையையும்-கழக முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும் தி.மு.கழகத்திலிருந்து அறவே நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்திருந்தார்.
தம் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்த ஜனவரி 24-ந் தேதியை நினைவூட்டும் வகையில் மு.க.அழகிரி பெயரிலான ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போடப்பட்டுள்ளது. அதில் ஆட்சிகள் மாறலாம்; காட்சிகள் மாறலாம்; ஆனால் விஸ்வாசம் அது என்றும் மாறாது என திமுகவின் கறுப்பு சிவப்பு கொடி காரில் பறக்கும் பின்னணியுடன் வாசகம் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியை பிடித்த போது முதலே, மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் சேர்க்கப்படுவார் என கூறப்பட்டது. ஆனால் அதற்கான எந்த சிக்னலும் வெளியாகாமல் இருந்தது. அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் மு.க.அழகிரியை, பெரியப்பா என்ற உறவின் அடிப்படையில் சந்தித்து காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். அப்போது திமுகவில் மீண்டும் சேருவது குறித்த கேள்விக்கு, அதை அவங்ககிட்டதான் கேட்கனும் என திமுக தலைமையை சுட்டிக்காட்டி பதிலளித்தார் அழகிரி.
இந்நிலையில் திமுக கொடி பறக்க அழகிரி பெயரிலான ட்விட்டர் பக்கத்தில் ஆட்சிகள் மாறலாம்; காட்சிகள் மாறலாம்; ஆனால் விஸ்வாசம் அது என்றும் மாறாது என வாசகம் இடம்பெற்றிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.