பிளான் போட்டு வந்த அதிமுக.. சத்தமே இன்றி ஆஃப் செய்த முதல்வர்.. அடுத்தடுத்த 5 சம்பவம்- நடந்தது என்ன?
சென்னை: புதிய தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. பல அதிரடி விவாதங்கள், குற்றச்சாட்டுகள், வெள்ளை அறிக்கை தாக்கல், நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்ட பல ஏற்ற இறக்கங்களோடு சட்டசபை கூட்டத்தொடர் முடிந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வரின் செயல்பாடு எப்படி இருந்தது, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சவால்களை, எதிர்ப்புகளை அவர் எப்படி சமாளித்தார் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
2021 தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் முழுக்கவே திமுக முறையாக திட்டமிட்டுதான் செயல்பட்டது. எந்த நாளில் எந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். எப்போது எதை பற்றி விவாதிக்க வேண்டும். அதிமுகவின் எதிர்ப்புகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்று முறையாக திட்டமிட்டே திமுக செயல்பட்டு வந்தது. வெள்ளை அறிக்கை தாக்கல், அதை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல், அதன் மீதான விவாதம் என்று சட்டசபை இந்த முறை மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
கையில் 3 வயது குழந்தை.. திடீரென இளம்பெண் செய்த பகீர்.. அரண்டு போன தர்மபுரி கலெக்டர் ஆபிஸ்!
முதல்வராக முதல்முறை ஸ்டாலின் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்டார். 10 வருடங்களில் முதல்முறையாக முதல்வரின் துறைக்கே கேள்வி நேரத்தில் பதில் அளித்தது தொடங்கி அதிமுகவின் விமர்சனங்களை நேரடியாக எதிர்கொண்டது வரை சட்டசபையில் பட்டாசாகவே முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டார்.
அதிமுக பிளான்
ஆனால் அதிமுகவும் சளைத்தது இல்லை என்று சொல்லும் அளவிற்கு முறையான திட்டங்களோடுதான் அவைக்கு வந்திருந்தது. திமுக கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஏன் என்று கேள்விகளை வைத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பேசியது. அதன்பின் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளிகளை மேற்கொண்டு வெளிநடப்பு செய்தது. மூன்று முக்கியமான விஷயங்களை வைத்து அதிமுக தரப்பு திமுகவிற்கு செக் வைக்க முயன்றது.
கோடநாடு
முதல் விஷயம் கோடநாடு வழக்கு. கோடநாடு வழக்கில் திமுக எதிர்ப்பு அரசியல் செய்வதாக கூறி அதிமுக கடும் அமளியில் ஈடுப்பட்டது. அதோடு இரண்டு நாட்கள் அவையை புறக்கணித்து ஜனநாயக ரீதியாக திமுகவை கடுமையாக எதிர்த்தது. கோடநாடு குறித்து திமுகவினர் பேசிய கருத்துக்களை உடனடியாக அவையில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டது. எடப்பாடி பழனிசாமி இரண்டு முறை அவையில் இது தொடர்பாக கேள்வி எழுப்பி பரபரப்பை கிளப்பினார்.
ஜெயலலிதா பல்கலைக்கழகம்
இன்னொரு பக்கம் ஜெயலலிதா பல்கலையை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை எதிர்த்து அதிமுக பேசியது. அவையில் இதற்காக கடும் அமளியில் அதிமுக தரப்பு ஈடுப்பட்டது. அதோடு அவையை புறக்கணித்து வெளியேறிய அதிமுகவினர் சட்டசபைக்கு வெளியே போராட்டத்தில் குதித்தனர். அதன்பின் நேற்றும் நீட் தேர்வுக்கு எதிராக திமுகவின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்து, மாணவர் தனுஷ் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதிமுக அமளியில் ஈடுபட்டது. எந்தெந்த விஷயங்களை எதிர்க்க வேண்டும், எதை பற்றி பேச வேண்டும் என்று திட்டமிட்டு அதிமுக அவைக்கு வந்து இருந்தது.
Recommended Video
எதிர்பார்த்ததை விட சிறப்பு
ஆனால் முதல்வர் ஸ்டாலின் இதை அனைத்தையும் மிகவும் சிறப்பாகவே எதிர்கொண்டார். அதிமுகவின் அனைத்து கனைகளையும் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக எதிர்கொண்டார். அவையில் நேரம் கருதி, தன்னை பற்றி யாரும் புகழ்ந்து கூட பேசக்கூடாது என்று கண்டிப்புடன் குறிப்பிட்டார். முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் சிறப்பாக செயல்பட்டதற்கு 5 சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம். சம்பவம் 1. கோடநாடு வழக்கு குறித்த கருத்துக்களை எடப்பாடி பழனிச்சாமி அவை குறித்து நீக்க வேண்டும் என்று சொன்னதும், ஸ்டாலின் அடுக்கடுக்காக, கோடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை நடந்த அன்று சரியாகி சிசிடிவி செயல்படாமல் போனது ஏன்? கோடநாடு வழக்கில் தடை கோரியது யார்? வழக்குக்கு தடை கோரி உச்ச நீதிமன்றம் சென்றது யார்? கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது ஆட்சியில் இருந்தது யார்? கோடநாடு சம்பவத்தின்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்..? கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் கோடநாடு வழக்கில் முறையான நடவடிக்கை எடுக்காதது ஏன்? அப்போது ஏன் வழக்கை முடிக்கவில்லை? என்று கேள்விகளை கேட்டு திக்குமுக்காட செய்தார்.
நீட்
சம்பவம் 2. நீட் பற்றி அதிமுக பேசியதும்.. உங்கள் ஆட்சியில்தான் 13 மாணவர்கள் மரணம் அடைந்தனர். நீங்கள் நீட் தேர்வை ரத்து செய்யும் வாய்ப்பு இருந்தும் நழுவவிட்டு விட்டீர்கள்.. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு மத்திய அரசு உங்களிடம் ஆதரவு கேட்ட போது, நீங்கள் மத்திய அரசிடம் நீட் குறித்து பேசி இருக்கலாம்.. அப்போது நீட் தேர்வுக்கு அதிமுக விலக்கு கேட்கவில்லை. மத்திய அரசுக்கு ஆதரவாகவே நீங்கள் செயல்பட்டு வந்துள்ளீர்கள். மாணவர் தனுஷின் தற்கொலைக்கு அதிமுக அரசுதான் காரணம் . அதிமுக ஆட்சியில் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தீர்கள். நீட் விலக்குக்காக நிபந்தனை விதித்திருக்கலாம், அந்த திராணி அதிமுகவுக்கு இல்லை என்று கூறி அதிமுக அமைதிப்படுத்தினார்.
திமுக இடமே கொடுக்கவில்லை
சம்பவம் 3. அதேபோல் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்பான வாதத்திலும்.. அந்த பல்கலைக்களம் பெயர் அளவில்தான் இருக்கிறது. வெறும் போர்ட் மட்டுமே இருக்கிறது. பல்கலைக்கழகம் முறையாக செயல்படவில்லை. அப்படி இருக்கும் போது அதை இணைப்பதில் அரசியல் எதுவும் கிடையாது என்று கூறி அதிமுகவை ஆப் செய்தார். சம்பவம் 4. இதெல்லாம் போக முக்கியமான விஷயம் என்றால் அது விநாயகர் சதுர்த்தி ஊர்வல தடைதான். இதை பாஜக தீவிரமான பிரச்சனையாக மாற்ற அவையில் முயன்றது. ஆனால் முதல்வரோ.. நான் ஒரு விளக்கத்தை அவருக்கு மட்டுமல்ல, இந்த மன்றத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும்- ஏன், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கத் தேவையான கட்டுப்பாடுகளை 30-9-2021 வரை தொடர்ந்து நடைமுறைப்படுத்த, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றமும் அதைத்தான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது.
விழா கொண்டாடலாம்
உங்களை யாரும் விழா கொண்டாட வேண்டும் என்று சொல்லவில்லை. விநாயகர் சதுர்த்திக்கு நாங்கள் எதிரி இல்லை. பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட சமய விழாக் கொண்டாட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளே தவிர, தனி நபர்களைப் பொறுத்தவரையில், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, தங்கள் இல்லங்களில் கொண்டாடலாம், என்று அரசின் நிலைப்பாட்டை அறிவித்து மொத்தமாக பாஜகவையும் ஆப் செய்தார். இதனால் பாஜகவின் பெரிய போராட்ட பிளானும் பிசு பிசுத்து போனது.
ஆஃப் செய்த ஸ்டாலின்
சம்பவம் 5. அதோடு திமுக கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை என்ற புகாருக்கு நேற்று முதல்வர் முற்றுப்புள்ளி வைத்தார். 5 சவரனுக்கு கீழான நகைகளுக்கு நேற்று தள்ளுபடி கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றினார். இந்த விஷயங்களை எல்லாம் அதிமுக, பாஜக பிரச்சனையாக எழுப்ப நினைத்து இருந்த நிலையில் அதை பற்றி பெரிய வாதங்கள் நிகழாமல் உடனடியாக அறிவிப்புகளை வெளியிட்டு பட்ஜெட் கூட்டத்தொடரை முதல்வர் நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.