மோடி மீட்டிங்.. நயினாரின் ராஜ விருந்து.. எடப்பாடியை தங்கம் போல கொண்டாடும் பாஜக.. என்ன காரணம்?
சென்னை: பாஜக மூத்த தலைவர்கள், டாப் லீடர்கள் எல்லோரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை தங்கம் போல கொண்டாட தொடங்கி உள்ளனர். கடந்த முறையை விட இந்த முறை கூட்டணியில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

எடப்பாடிக்காக ஓ பன்னீர்செல்வம் புறக்கணிப்பு
சமீபத்தில் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை. ஓ பன்னீர்செல்வம் மோடிக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் இருந்தார் . ஒரு காலத்தில் அதிமுகவில் சசிகலா ஆட்சிக்கு வருவதற்கு எதிராக தர்மயுத்தம் செய்தவர் ஓ பன்னீர்செல்வம். அப்போதில் இருந்தே ஓ பன்னீர்செல்வம் பாஜக உடன் நெருக்கமாக இருந்ததாக செய்திகள் வந்தன.
பாஜக தலைவர்களையும் அவ்வப்போது ஓ பன்னீர்செல்வம் சந்தித்து வந்தார். அதன்பின் அதிமுக உடைந்து மீண்டும் ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி கரம் கோர்க்க பாஜக முக்கியமான காரணமாக இருந்தது. ஓ பன்னீர்செல்வம் அப்போது பாஜக உடன் மேலும் நெருக்கம் ஆனார். ஓ பன்னீர்செல்வம் மகன் ஓ பி ரவீந்திரநாத் நாடாளுமன்றத்திலேயே பாஜகவை, மோடியை அவ்வப்போது பெரிய அளவில் புகழ்ந்தும் பேசி வந்தார். நாடாளுமன்றத்தின் பாஜகவின் மசோதாக்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்தார். ஆனால் எடப்பாடிக்காக ஓ பன்னீர்செல்வத்தை மோடி புறக்கணித்துள்ளார்.
எடப்பாடியிடம் தனியாக பேசிய மோடி
சமீபத்தில் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். தூத்துக்குடியில் பிரதமர் மோடியை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் போது அவருடன் அதிமுக மாஜி அமைச்சர்களும் உடன் இருந்தனர். எடப்பாடி - மோடி இடையே தனியாக சந்திப்பு நடக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி - மோடி இடையே தனிப்பட்ட உரையாடல் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் 10 நிமிடம் தனியாக பேசி உள்ளனர். போனில் சில முக்கியமான விஷயங்களை உரையாடி உள்ளனர்.
தமிழ்நாடு சட்ட ஒழுங்கு பிரச்சனை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். அதேபோல் திமுக அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். முக்கியமாக 3 திமுக அமைச்சர்கள் பெயரை சொல்லி அவர்களின் வழக்குகளை விசாரிப்பதை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.
திமுகவிற்கு எதிராக வியூகங்களை வகுக்க மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் தேவை என்றும் எடப்பாடி பழனிசாமி மோடியிடம் கேட்டு உள்ளார். இது இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் தொடர்பாக சில தனிப்பட்ட புகார்களையும் எடப்பாடி பழனிசாமி மோடியிடம் வழங்கி உள்ளார்.
பாஜக எடப்பாடி நெருக்கம்
தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுச்சிப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மேற்கு மண்டலத்தில் இருந்து இந்த பயணம் தொடங்கி உள்ளது. இதில் விரைவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த பயணம் கிட்டத்தட்ட அதிமுக + பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் பயணமாக அமைந்துவிட்டது. இரண்டு கட்சிகளும் நெருக்கமாகும் அளவிற்கு பயணத்தில் பல முக்கியமான சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. முன்னதாக பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எனது அருமை நண்பர் எடப்பாடி பழனிசாமி , மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் தொடங்கிய "புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணத்தில்" மேட்டுப்பாளையத்தில் கலந்துகொண்டேன், என்று குறிப்பிட்டார். ஏற்கனவே தனது பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் பாஜகவிற்கு ஏற்ற பல கருத்துக்களை கூறி வருகிறார். மக்கள் கோயில்களின் உண்டியலில் பணம் செலுத்துவது, கோயிலை மேம்படுத்தவே. ஆனால், திமுக அரசு அனைத்து கல்லூரிகளையும் அரசுப் பணத்தில் கட்டாமல், அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் இது ஒரு சதிச்செயல் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள்.
கல்விக்கு செலவு செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், அதை அரசுப் பணத்தில் செய்ய வேண்டும். கோயில் பணத்தை கல்விக்காக செலவு செய்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது பணம் இருப்பது திமுகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், அது அவர்களின் கண்களை உறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களுக்கு கோயில்கள் மீது விருப்பம் இல்லாத காரணத்தால், கோயில் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டப்படுகிறது., என்று எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட பாஜகவின் குரலில் பேசி உள்ளார்.
நயினார் நாகேந்திரன் விருந்து
2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று இரவு ராஜ விருந்து அளித்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். மொத்தம் 108 வகையான உணவுகள் தடபுடலாக தயார் செய்யப்பட்டு அதிமுக, பாஜக தலைவர்களுக்கு பரிமாறப்பட்டது.
இரவில் நடந்த விருந்தில் அதிமுக தலைவர்கள், பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், ஆர்பி உதயகுமார், கடம்பூர் ராஜூ, எம்எல்ஏக்கள் உள்பட பலர் பங்கேற்றனர். பாஜக சார்பில் மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய இணையமைச்சர் எல். முருகன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விருந்தில் 108 வகையான சைவ உணவுகள் மற்றும் 15 வகையான உணவு பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது. ஸ்பானிஷ், சைனீஸ் வகைகளை உள்ளடக்கிய 4 வகையான சூப், தாய் மற்றும் இந்திய வகைகளை சேர்ந்த இரு வகையான சாலட், இட்டாலியன், கொரியன், சைனீஸ், தென்னிந்திய வகைகளை உள்ளடக்கிய 9 வகையான ஸ்டார்டர்கள், 3 வகையான பார்பிக்யூ, 5 வகையான வடமாநில சாட்கள், 3 வகையான திருநெல்வேலி அல்வா , 11 வகையான இனிப்பு, 3 வகையான போலிகள், இரு வகையான இட்லி, அம்மனி கொழுக்கட்டை பரிமாறப்பட்டது.
என்ன காரணம்?
கிட்டத்தட்ட பாஜக எடப்பாடி பழனிசாமியை தங்கம் போல கொண்டாட தொடங்கிவிட்டது. அண்ணாமலையை விட பாஜக மூத்த தலைவர்கள், டாப் லீடர்கள் எல்லோரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை தங்கம் போல கொண்டாட தொடங்கி உள்ளனர். கடந்த முறையை விட இந்த முறை கூட்டணியில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளனர்.
இதற்கு என்ன காரணம்? கூட்டணி மட்டும் காரணமா? தேர்தலை மனதில் வைத்து முக்கியத்துவமா? அதிமுக - பாஜக தொண்டர்கள் நெருக்கமாக வேண்டும் என்று இப்படி செய்கிறார்களா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications