தாய்லாந்திற்கு "இன்ப சுற்றுலா!" ஆசாமியின் பேக்கை திறந்த பார்த்தால் செம ஷாக்! மிரண்டுபோன அதிகாரிகள்
சென்னை: தாய்லாந்தில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவரின் பையைத் திறந்த பார்த்த போது சுங்கத்துறை அதிகாரிகளே சற்று மிரண்டு போய்விட்டனர்
Recommended Video
சர்வதேச அளவில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் முறைகேடாகக் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அப்படித்தான் தாய்லாந்தில் இருந்து திரும்பிய விமானத்தில் வந்த பயணியிடம் சுங்கத் துறையினர் நடத்திய சோதனையில் அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது.

தாய்லாந்து
தாய்லாந்து தலைநகர் பேங்காக் நகரில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை வழக்கம் போலச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். தாய்லாந்தில் இருந்து வந்தவர்களில் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த 21 வயதான முகமது ஷகீல் என்பவர் மீது சென்னை ஏர்போர்ட் சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

சுங்கத் துறை
இதையடுத்து சுங்கத் துறையினர் அவரை அழைத்து விசாரித்து உள்ளனர். அவரிடம் சற்று பெரிய குடை போன்ற பை ஒன்று இருந்துள்ளது. இது தொடர்பாகச் சுங்கத் துறையினர் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பையைத் திறந்து உள்ளனர். அந்த பையைத் திறந்த போது, அதிகாரிகளே சற்று மிரண்டுவிட்டனர்.

மிரண்ட அதிகாரிகள்
அந்த பைக்குள் தனித்தனி சிறிய பாக்கெட்டுகளில் மத்திய ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, செசல்ஸ் தீவு போன்ற பகுதிகளில் வசிக்கும் பாம்புகள், குரங்கு, ஆமை போன்ற விலங்குகள் உள்ளே இருந்துள்ளன. இவை அனைத்தையும் அந்த நபர் சட்ட விரோதமாகக் கடத்தி வர முயன்றுள்ளார். இதையடுத்து அந்தப் பயணியைச் சுங்கச்சாவடி அதிகாரிகள் தனியே நிறுத்தி வைத்தனர். மேலும், இது தொடர்பாக மத்திய வனக்குற்ற பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

23 விலங்குகள்
இதையடுத்து விமான நிலையத்திற்கு விரைந்த வந்த மத்திய வனக்குற்ற பிரிவு அதிகாரிகள் அதைச் சோதனை செய்தனர். உள்ளே வட அமெரிக்காவின் கிங் ஸ்நேக் என்ற விஷமற்ற பாம்புகள் 15 இருந்துள்ளன. மேலும் ஆப்பிரிக்காவின் மேற்கு, மத்திய பகுதிகளில் உள்ள காடுகளில் வசிக்கும் ஐந்து பால் பைத்தான் மலைப்பாம்பு குட்டிகள், ஆப்பிரிக்க நாட்டில் சேஷல்ஸ் தீவில் அதிகம் காணப்படும் இரண்டு அல்ட்ரா பிராட் டாடாஸ் ஆமைகள், மத்திய ஆப்பிரிக்காவில் வசிக்கும் டி பிராசா மங்கி என்ற குரங்கு குட்டி என மொத்தம் 23 விலங்குகள் அங்கு இருந்துள்ளன.

விசாரணை
இதையடுத்து அந்த நபரிடம் சுங்க அதிகாரிகளும், மத்திய வன குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றதும் அங்கு இருந்தே இந்த விலங்குகளை வாங்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும், எதற்காக அவர் இத்தனை விலங்குகளை உரிய அனுமதி கூட இல்லாமல் வாங்கி வந்தார் என்பது குறித்துத் தெரியவில்லை.

சோதனை தேவை
பொதுவாக வெளிநாடுகளில் இருந்து விலங்குகளை வாங்கி வரும்போது, அதில் எவ்வித நோய்க் கிருமிகளும் இல்லை என்பதை உறுதி செய்யச் சர்வதேச வனத்துறை மற்றும் சர்வதேச சுகாதாரத் துறையிடம் உரிய அனுமதி பெற்று, உரிய மருத்துவ பரிசோதனை நடத்தியே கொண்டு வர வேண்டும். இருப்பினும், எவ்வித மருத்துவ சோதனையும் அனுமதியும் இல்லாமல் அவர் விலங்குகளை எடுத்து வந்துள்ளார்.

அதிரடி முடிவு
இதையடுத்து இந்த அத்தனை விலங்குகளையும் மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கே திரும்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், அதற்கான கட்டணத்தையும் அந்த நபரிடம் இருந்தே வசூலிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அவரிடம் அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் சென்னை ஏர்போர்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications