தமிழகத்தில் புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. சீக்கிரம் சதம் அடிச்சிரும் - விளாசும் காங்கிரஸ்
பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் விரைவில் சதமடிக்கப் போகிறது பெட்ரோல் விலை.
சென்னை: லாக்டவுன் காலத்தில் பெட்ரோல் டீசல் விலை தினசரியும் உயர்ந்து வருகிறது. மே மாதத்தில் இருந்து இன்று வரைக்கும் 20 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை நெருங்கி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.96.94-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.91.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினசரியும் உயர்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா லாக்டவுன் காலத்திலும் தினசரியும் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

தினசரி உயரும் விலை
மே மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 16 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டது. ஜூன் மாதத்திலும் அடுத்தடுத்து உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 4ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 96 ரூபாயைக் கடந்தது. டீசல் ஒரு லிட்டர் 90 ரூபாயைக் கடந்தும் விற்பனை ஆனது. பெட்ரோல் டீசல் விலை இன்று வரை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1 லிட்டர் விலை ரூ.97
சென்னையில் இன்றைய தினம் பெட்ரோலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.96 ரூபாய் 94பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 91 ரூபாய் 15 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 98 ரூபாய் 68 பைசாவாக விற்பனையாகிறது. மதுரையில் 97 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகிறது.

டெல்லியில் விலை எவ்வளவு
மும்பையில் பெட்ரோல் விலை, 101 ரூபாயை தாண்டியுள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 76 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 93ரூபாய் 85 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியிலும், பெட்ரோல் விலை உயர்ந்து உள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 95 ரூபாய் 56 காசுகளுக்கும், டீசல் லிட்டர், 86 ரூபாய் 47 காசுகளுக்கும் விற்பனையாகி வருகிறது. இதேபோல், கொல்கத்தாவிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 95 ரூபாய் 52 காசுகளுக்கும், டீசல் 89 ரூபாய் 32 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
இதனிடைய விலை உயர்வு பற்றியுள்ள மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது தமது விருப்பம் எனவும், எனினும் அதற்கான அதிகாரம் ஜிஎஸ்டி கவுன்சிலுக்குதான் உள்ளது என்றும் கூறியுள்ளார். கச்சா எண்ணெய் விலை குறையும் போது பெட்ரோல், டீசல் விலை குறையும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

வரி வசூலிப்பு
எரிபொருட்கள் விலை உயர்வுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வரி வசூலிக்கும் அலைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதாக குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, பெட்ரோல் நிலையத்தில் பணத்தை செலுத்தும் போது, மோடி தலைமையிலான அரசின் பண வீக்க அதிகரிப்பை காண முடியும் எனவும் விளாசியுள்ளார்.

7 ஆண்டுகளில் 459 சதவிகிதம் உயர்வு
இதனிடையே பாஜக ஆட்சிக்கு வந்து கடந்த 7 ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் 459 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியள்ளார். இதன் மூலம் ரூ.20 லட்சம் கோடி வருவாயை மத்திய அரசு பெருக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வருவாய் பெருக்கத்தின் காரணமாக மக்கள் மீது கடுமையான சுமை ஏற்றப்பட்டிருப்பதாக கூறியுள்ள கே.எஸ் அழகிரி, ஜூன் 11 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications