என்னாது இது நிழற்குடையா?.. தகர ஷீட்டு, ஸ்டீல் ராடுக்கு 1.54 கோடி செலவா?..கனிமொழிக்கு காயத்ரி கேள்வி
சென்னை: தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக எம்பி கனிமொழியால் திறக்கப்பட்ட நவீன பேருந்து நிலையத்திற்கு ரூ 1.54 கோடி செலவா என பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக எம்பியாக இருப்பவர் கனிமொழி. இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு முன்னரே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்திருந்தார்.
இந்த நிலையில் அவர் தூத்துக்குடி எம்பி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் தூத்துக்குடியில் வீடு எடுத்து தங்கி அங்கிருந்தபடியே மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

தினந்தோறும்
தினந்தோறும் மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்த நிலையில் அவர் எம்பியானதும் அந்த பகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து தீர்வு கண்டு வருகிறார். வாழப்பாடி அருகே போலீஸார் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவத்தை முதல் ஆளாக கண்டித்தவரும் கனிமொழி.

வாய்த் திறக்காமல்
திமுக ஆட்சியில் நடந்திருந்தாலும் அது குறித்து வாய்த் திறக்காமல் இருக்காத கனிமொழி இது போன்ற செயல்களால் திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என கண்டனம் தெரிவித்திருந்தார். அந்த வகையில் எங்கு அநீதி நடந்தாலும் முதலில் செல்பவர் கனிமொழிதான். அது போல் எங்கு உதவி என கேட்டாலும் அங்கும் கூப்பிட்ட குரலுக்கு சென்றுவிட்டார்.

தென்காசி தொகுதி
தென்காசி பகுதியில் ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த பழங்குடியின பெண்ணுக்கு கல்லூரியில் இடம் கிடைக்க ஏற்பாடு செய்ததுடன் நன்றாக படிக்க வேண்டும் என போன் போட்டு நம்பிக்கை தரும் வார்த்தைகளை பேசினார். அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின் கீழ் (2019-2020) ஆம் ஆண்டு எம்பி நிதியை கொண்டு ஒரு பேருந்து நிழற்குடையை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

கல்வெட்டு
கடந்த 5 ஆம் தேதி திறக்கப்பட்ட அந்த நவீன பேருந்து நிலையம் சுமார் 1.54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டதாகும். இதுகுறித்த கல்வெட்டு அந்த பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டையும் பேருந்து நிலையத்தையும் புகைப்படம் எடுத்து போட்ட பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம், எம்பி கனிமொழிக்கு ஒரு கேள்வியையும் கேட்டுள்ளார்.

என்னாது ரூ 1.54 கோடியா
இதுகுறித்து அவர் தனது ட்வீட்டை கனிமொழிக்கு டேக் செய்து பதிவிட்ட நிலையில், இந்த பேருந்து நிழற்குடைக்கு ரூ 1.54 கோடி செலவா என கேட்டுள்ளார். இதற்கு தூத்துக்குடியில் எத்தனை பேருந்து நிலையங்கள் இருக்குனு சொல்லுங்கள் என காயத்ரியிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இன்னும் சிலர் 4 பெட்ரூம் உள்ள ஒரு பிளாட் வாங்கினாலே ஒரு கோடி தாண்டாது. இந்த தகர ஷீட்டுக்கும் ஸ்டீல் ராடுக்கும் 1.54 கோடியா என நெட்டிசன் கேட்டுள்ளார். ஆனால் நிழலோட அருமை வெயிலில் சென்றால்தான் தெரியும். அது போல் பஸ்ஸுக்காக வெயில், மழையில் அவதிப்பட்டது அந்த ஊர் மக்களுக்குத்தான் தெரியும் என்றும் கருத்துகள் உலா வருகின்றன.












Click it and Unblock the Notifications