அதிமுகவில் யாதவர்களுக்கு முக்கியத்துவம் இல்லையா? இதுக்கு கோகுல இந்திராவின் அதிரடி பதிலை பாருங்க!
சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் களைகட்டிவிட்டது. இந்த பரபரப்பான நேரத்தில் சென்னை அண்ணா நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் கோகுல இந்திராவை ஒன் இந்தியா சார்பில் சந்தித்தோம். அவரிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. வாருங்கள் கேட்கலாம்.
வெற்றி வாய்ப்பு
அண்ணா நகரில் மீண்டும் போட்டியிடுகிறீர்கள்? உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
அண்ணா நகர் தொகுதியில் 2011-ல் 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெறும் 1,080 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். ஜெயலலிதா அருளாசியுடனும், முதல்வர், துணை முதல்வர் ஆசியுடனும் இந்த முறை எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது ஜெயலலிதா வழியில் தமிழக ஆட்சி மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. மக்களிடம் எந்தவித எதிர்ப்பும் இல்லை. ஆகவே நான் உள்பட அனைவரும் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக சொல்கிறேன்.
நிர்வாகிகள் நலன்
சொந்த மாவட்டமான சிவகங்கையில் தொகுதியை எதிர்பார்த்ததாக கூறப்படுகிறதே?
இது மிகவும் கற்பனையான செய்தி. நான் பல ஆண்டுகளாக சென்னையில்தான் இருக்கிறேன். சென்னைவாசியாகி விட்டேன். ஏதேனும் விசேஷங்கள் நடந்தால் மட்டுமே சொந்த ஊருக்கு செல்வேன். மற்றபடி எனக்கு சொந்த மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மேலும், அங்கு நீண்ட காலமாக கட்சி பணியாற்றி கொண்டிருக்கும் நிர்வாகிகளின் வாய்ப்பை நான் தட்டிப்பறிக்க விரும்பவில்லை.
எதிர்ப்பு இல்லை
அதிமுக வேட்பாளர்கள் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதே?
எம்.ஜி.ஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடும்போது வாய்ப்பு கிடைக்காதவர்கள், தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துவார்கள். இது தற்காலிகமானதுதான். தேர்தல் பணி வரும்போது எல்லோரும் ஒற்றுமையாக பணிபுரியும் சூழல் வந்து விடும்.
இலவச சிலிண்டர் சாத்தியம்
6 மாத காலம் சிலிண்டர் இலவசம் என்பதெல்லாம் சாத்தியமா?
சாத்தியமுள்ள, சாத்தியமாக்கப்படும் ஒரு செய்லபட்டைதான் முதல்வர் கூறி இருக்கிறார். இது கண்டிப்பாக செயல்படுத்தப்படும்.
யாதவர்களுக்கு முக்கியத்துவம்
அதிமுகவில் யாதவ சமுதாயத்தினருக்கு முக்கியத்துவம் தரவில்லையா?
அப்படி என்று யார் சொன்னது? எம்.ஜி.ஆர். ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவில் யாதவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் நான், சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்பட 5 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.