நிலம் உள்ளவர்களுக்கு ஹேப்பி.. அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் வாங்கியுள்ளோருக்கு குட்நியூஸ்.. பெயிரா நன்றி
சென்னை: மலைப்பகுதிகளில் அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் வாங்கி வைத்திருப்பவர்கள் மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் வகையில் கொடுக்கப்பட்ட காலவகாசத்தை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளதற்கு பெயிரா நன்றி தெரிவித்துள்ளது.. பொதுமக்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்கி விண்ணப்பங்களுக்கான கால வரம்பையும் தமிழக அரசு நீட்டித்துள்ளதற்கு பெயிரா தன்னுடைய பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டுள்ளது. அத்துடன் பொதுமக்களின் நலன் கருதி நினைவூட்டல் கோரிக்கை ஒன்றையும் தமிழக அரசுக்கு விடுத்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, ரியல் எஸ்டேட்டின் வளர்ச்சி என்பது அபரிமிதமானது.. குறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், ஏராளமானோர் மலைப்பகுதிகளிலும் வீட்டுமனைகளை வாங்கியிருக்கிறார்கள்..

எனினும் பல வீட்டு மனைகள் முறையான அரசின் அனுமதியை பெறவில்லை.. இதன்காரணமாக, அரசு அங்கீகாரமும், மேற்கண்ட மனைகளுக்கு வழங்கப்படவில்லை.. இத்தகைய சூழலில் மலைப்பகுதிகளில் அத்தகைய வீட்டு மனை வாங்கியவர்கள் தமிழக அரசுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தவாறே இருந்தது.
பெயிரா விடுத்து வந்த கோரிக்கை
இதனிடையே பெயிரா எனப்படும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பும் இதே கோரிக்கையை நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தது.. மலைப்பகுதிகளின் அருகிலுளள அங்கீகாரமற்ற வீட்டு மனை பிரிவுகளில் விற்கப்படாத மனைகளை மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறுவதற்கான கால நீட்டிப்பை வழங்க வேண்டும் என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி, தமிழக அரசுக்கு கோரிக்கையாக அனுப்பி வைத்திருந்தார்.
சமீபத்தில்கூட பெயிரா கூட்டமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர்கள் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பெயிரா (FAIRA) அமைப்பு நிர்வாகிகள், தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் பொது கட்டிட விதிகள் 2019-ல் உள்ள பல விதிகள் மலைப்பகுதிகளுக்கு பொருந்தவில்லை என்பதால், மலைப் பகுதிகளுக்கென தனியாக புதிய கட்டிட விதிகளை உருவாக்கிட வேண்டும் என்பதை கோரிக்கையாக வெளிப்படுத்தியிருந்தனர்.
அங்கீகாரமற்ற வீட்டுமனைகள்
இந்நிலையில்தான், மலைப்பகுதிகளில் அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் வாங்கி வைத்திருப்பவர்கள் மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் வகையில் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், "மலையிடப்பகுதிகளில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழு எண்ணிக்கையிலான மனைகள் விற்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு வசதியாக, அரசு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.66, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாள்.30.03.2020-இல் விதி திருத்தத்தை வெளியிட்டுள்ளது.
கால வரம்பு நீட்டிப்பு
இதன்படி பொதுமக்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க மேலும் வாய்ப்பை வழங்கி விண்ணப்பங்களுக்கான கால வரம்பை 30.11.2025 வரை நீட்டித்து அரசாணை எண்.32, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள்.25.02.2025-ல் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.tnlayouthillareareg.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன்மூலம், மலையிடப்பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த பொதுமக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு 1 சதவீதம்
தமிழக அரசின் இந்த கால நீட்டிப்புக்கு பெயிரா மீண்டும் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல, பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளதற்கம் பெயிரா தன்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டுள்ளது.
அதேசமயம், முத்திரைத் தீர்வை விலக்கு பெற பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்துக்களுக்கு மட்டும் என்கிற வரம்பினை நிர்ணயிக்காமல், தமிழகத்திலும் நிரந்தரமாக வசிக்கும் பெண்கள் பெயரில் சொத்துக்களை வாங்கினால் அவர்களுக்கும் முத்திரைத் தீர்வையில் 50% விலக்கு அளிக்கும் வகையில், நடவடிக்கையை மேற்கொண்டு உரிய வழிவகை செய்ய வேண்டும் என்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி மீண்டும் நினைவூட்டல் கோரிக்கையை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications