இனி போட்டித்தேர்வுகளில் தமிழ் கட்டாயம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!
சென்னை: தமிழக இளைஞர்களுக்கு 100 சதவீத வேலை கிடைக்கும் வகையில் அரசு போட்டித் தேர்வில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் ஆக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நேரடி நியமனம் மற்றும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசுப் பணிகளில் தமிழர்கள் அல்லாத பிற மாநிலத்தவர் அதிகம் நியமிக்கப்படுவதாகவும், இதனால் அரசு போட்டித் தேர்வுகளில் 100 சதவீதம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அரசு போட்டித் தேர்வுகள் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தேர்வர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்..
இந்த நிலையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது மனிதவள மேலாண்மை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது இதற்கு துறை அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். அப்போது அவர் கூறும்போது தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களை பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 100% தேர்வு செய்யும் வகையில் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாளில் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்..
மேலும் சமூகத்தில் பாலின சமத்துவம் முக்கியமானது என்பதை அரசு உணர்ந்து உள்ளதாகவும், அதனால் அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும், கொரோனா காரணமாக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுவது தாமதமானதால் நேரடி நியமன வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும், அண்ணா மேலாண்மை நிலையத்தில் காட்சி ஊடக செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக படப்பிடிப்பு தளம் உருவாக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நிலையில் அமைச்சரின் அறிவிப்பையடுத்து, தமிழக அரசின் போட்டித்தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாளில் தேர்ச்சியை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் தமிழ் மொழிதாள் தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயம் ஆக்கப்படுகிறது. தமிழ் மொழித் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுவதாகவும், மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ் மொழித்தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயம் ஆக்கப்படும் எனவும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுதாட்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது