வால்பாறையில் 2 நாட்கள் உறைபனி.. அறிவித்தது சென்னை வானிலை மையம்
சென்னை: வால்பாறை, அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு உறை பனி தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த உறை பனி, நேற்று முதல் கணிசமான அளவில் குறைந்து வருகிறது. இருந்தபோதிலும், இந்த நிலை வால்பாறை, அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் மட்டும் அடுத்த இரண்டு இரவுகளுக்கு தொடரும்.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸூம், குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை பதிவாகும்.
மேலும், பபுக் புயல் அந்தமான் கடல் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, போர்ட் பிளேயர்க்கு 130 கிலோ மீட்டர் தொலைவில் மண்டலமாக நிலை கொண்டு உள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.