சுயமரியாதை கற்றுத்தந்த குரு..நன்றி அப்பா.. குரு பூர்ணிமா நாளில் கருணாநிதிக்கு நன்றி சொன்ன குஷ்பு
டாக்டர் கலைஞர் அவர்கள் எப்போதும் நினைவுகூறப்படுவார், என் பார்வையில் எப்போதும் உயர்ந்த மரியாதையுடன் இருப்பார். நன்றி அப்பா என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.
சென்னை: குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு. என்னை அரசியலுக்கு அழைத்து வந்து, மனிதநேயம், சமத்துவம், அரசியல் கருணை, எப்போதும் சுயமரியாதையை விட வேறெதுவும் பெரிதல்ல ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்த ஒருவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் என நடிகை குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு 90களின் கனவுக்கன்னி. தமிழகத்தில் குஷ்புவிற்காக கோவில் கட்டி கும்பாபிஷேகமே செய்திருக்கின்றனர். சினிமா மட்டுமல்லாது சின்னத்திரையிலும் கோலோச்சியவர். அவர் நடத்திய ஜாக்பாட் போட்டி நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.
ஜெயா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த போதே திமுகவில் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி என எந்த ஆதரவு நிலையிலும் இல்லாமல் இருந்த குஷ்பு திடீரென அடுத்த தலைமை பற்றி கருத்து கூறி சர்ச்சையில் சிக்கினார்.

காங்கிரஸ் கட்சி
திமுகவில் இருந்த போதே பிரச்சினையை சந்தித்த குஷ்பு காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். பாஜகவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை பதிவிட்டார். இருந்த போது அங்கும் கோஷ்டி பிரச்சினையில் குஷ்புவிற்கு முக்கியத்துவம் குறைந்தது.

பாஜகவில் தஞ்சம்
காங்கிரஸ் கட்சியை விட்டு விட்டு பாஜகவில் தஞ்சமானார் குஷ்பு. கடந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனிடம் தோல்வியை தழுவினார். தேர்தல் முடிந்ததும் மீண்டும் நடிக்கத் தொடங்கிய குஷ்பு, தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீரா சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இளமை திரும்புதே
குஷ்பு தனது உடல் எடையை குறைத்து உள்ளார். சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் குஷ்பு தனது புகைப்படங்களை தினம் தினம் பதிவிட்டு வருகிறார். அதைப்பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

குரு பூர்ணிமா நன்றி
இன்று குரு பூர்ணிமா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் குஷ்பு. அதில், "இன்று குரு பூர்ணிமா 2022 முன்னிட்டு, என்னை அரசியலுக்கு அழைத்து வந்து, மனிதநேயம், சமத்துவம், அரசியல் கருணை, எப்போதும் சுயமரியாதையை விட வேறெதுவும் பெரிதல்ல ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்த ஒருவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். டாக்டர் கலைஞர் அவர்கள் எப்போதும் நினைவுகூறப்படுவார், என் பார்வையில் எப்போதும் உயர்ந்த மரியாதையுடன் இருப்பார். நன்றி அப்பா என்று குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி ஆசிரியைக்கு நன்றி
குரு பூர்ணிமா தினமான இன்று தனக்கு பள்ளியில் கற்றுக்கொடுத்த ஆசிரியைக்கும் நன்றி கூறி பதிவிட்டுள்ளார். ஒரு லட்சம் வணக்கங்கள் என்று கூறியுள்ள குஷ்புவிற்கு அவரது ஆசிரியை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதனையும் பதிவிட்டுள்ளார் குஷ்பு.












Click it and Unblock the Notifications