குருமூர்த்தி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி- குண்டாஸ் வழக்கில் கமிஷனருக்கு கோர்ட் நோட்டீஸ்
சென்னை: ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்றவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்த வழக்குக்கு பதிலளிக்கும்படி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஜனவரி 26ம் தேதி அதிகாலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர், ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முற்பட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், குண்டு வீச வந்தவர்களை விரட்டியதால், அவர்கள் தப்பியோடினர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் போலீசார், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களின் பதிவு எண்களை வைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சக்தி, தீபன், கண்ணன், ஜனார்த்தனன், வாசுதேவன், பாலு, சசிக்குமார், தமிழ் குமரன், பிரசாந்த் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் பிப்ரவரி 20ம் தேதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, 10 பேரின் உறவினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்படாத நிலையில், மத்திய அரசின் உத்தரவுக்கு பணிந்து தமிழக அரசு, தங்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாகவும், காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது அரசியல் ரீதியாக தொடரப்பட்ட பொய் வழக்கு எனவும், நடக்காத சம்பவத்தை நடந்தது போல கூறி, 10 இளைஞர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாக வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிகாலையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கல் நடத்த முயற்சித்துள்ளதாகவும், போலீசார் அவர்களை பிடிக்க முயற்சித்ததால், குண்டு வீசாமல் தப்பியோடி விட்டதாகவும், இவர்கள் ஜாமீனில் வெளி வந்தால், மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் ஆணையர் மற்றும் மயிலாப்பூர் ஆய்வாளருக்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications