மாஸ்க் மறந்தோம்.. கொரோனா வந்தது.. என்ன செய்யப் போறோம்? - சுகாதாரத்துறை செயலர்
சென்னை: "தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொது மக்களின் ஒத்துழைப்பு இன்னும் தேவைப்படுகிறது" என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Recommended Video

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பன்மடங்கு உயர்ந்துள்ளது. கர்நாடகா, டெல்லி, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மகாராஷ்டிரா மாதிரி பன்மடங்கு உயரவில்லை. எனினும், படிப்படியாக அதிகரிக்கிறது. கொரோனா பன்மடங்கு உயராமல் தடுக்க பொதுமக்கள் இந்த காலகட்டத்தில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவசியம் இல்லையா?
மக்கள் தற்போது மாஸ்க் அணிவதையே மறந்துவிட்டனர். அதனால் தான் கொரோனா பரவல் இங்கு அதிகரிக்கிறது. மாஸ்க் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் போது தான் பலருக்கு பரவி விடுகிறது. எனவே இது பரவாமல் தடுக்க தடுப்பூசி போடுவது அவசியம். கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்லும் போதும் கொரோனா பரவ வாய்ப்பு அதிகம் என்பதால், ஒவ்வொருவரும் அரசு வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம்.

ஒன்று சேர்ந்தால் தான் முடியும்
அண்மையில் தஞ்சாவூர், காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இப்படித்தான் கொரோனா பரவி விட்டது. எனவே மாஸ்க் அணியாமல் சென்றாலோ, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தாலோ அல்லது கைக் கழுவாமல் இருந்தாலும் அடுத்த சில மாதங்களில் நமக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கொரோனா பரிசோதனை நடைபெறும் இடங்களில் பரிசோதனை செய்து கொள்வதும் அவசியமாகும். கொரோனா தொற்று உயர்ந்து வருவதை குறைக்க பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்தால்தான் நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

மறந்துடாதீங்க
இதுவரை மற்ற நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட எந்த நோயும் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். இதற்கு முன்பதிவு செய்ய அவசியம் இல்லை. ஆதார் கார்டு அல்லது வேறு அடையாள அட்டை வைத்திருந்தால் போதும். அருகில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்கள் தடுப்பூசி போடுவதற்காக திறக்கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவனைகள், தனியார் ஆஸ்பத்திரிகள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இதற்கென ஊழியர்கள் உள்ளனர்.

1.31 கோடி வசூல்
எனவே பொது மக்களுடன் தொடர்புடைய நபர்கள், மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள், பஸ், ரெயில் நிலையங்களில் வேலை பார்ப்பவர்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மார்ச் 16-ம் தேதி முதல் இதுவரை மாஸ்க் அணியாமல் சென்றதாக 61,246 பேரிடம் இருந்து அபராதமாக ரூ.1.31 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications