கிளாஸ்ரூமில்.. டீச்சரை கட்டிப்பிடித்து முத்தம்.. திக்குமுக்காட வைத்த மழலை.. நொறுங்கிய "கோபம்".. வாவ்
பள்ளி ஆசிரியைக்கு வகுப்பில் படிக்கும் குழந்தை முத்தம் தரும் வீடியோ ஷேர் ஆகி வருகிறது
சென்னை: டீச்சரை கட்டிப்பிடித்து முத்தம் தந்துள்ளான் ஒரு மழலை மாணவன்.. இதயத்தை கொள்ளை கொள்ளும் இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஆங்காங்கே ஒருசில தவறுகளுக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் ஆளாகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனாலும், ஆசிரியர் திறம்படக் கற்பிக்கவும், மாணவர்கள் செம்மையாக கற்றிடவும், வகுப்பறையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான நல்லிணக்கச் சூழலே, ஆசிரியர் - மாணவர் உறவு தீர்மானிக்கிறது.
கிளாஸ்ரூம்
வகுப்பறைக்குள் தான் சந்திக்கும் மாணவர்களுக்கு, அந்த வகுப்பறையை தாண்டிய உலகத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இன்றைய ஆசிரியர்களுக்கு உள்ளது. வெறும் பாடங்களை அறிந்து கொள்ளாமல், பல பரிமாணங்களை பெற்றவராக ஒரு ஆசிரியர் தன்னை வளர்த்துக் கொள்வதும் அவசியமாகிறது.. அப்போதுதான், மாணவர்களை சமூகத்திற்கு ஏற்ற மனிதராக வார்த்தெடுக்கும் பணிகளையும் அவர்களால் இயல்பாக செய்ய முடியும்..
தோழா ... தோழா
இன்னும் சொல்லப்போனால், ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கு பாட அறிவை விட, குழந்தை உளவியல் கூடுதலாக தேவைப்படுகிறது. அதேபோல, கல்வி கற்க வரும் குழந்தைகளுக்கும், தங்களது ஆசிரியர் அல்லது ஆசிரியை, சக தோழனாக, தோழியாக, பெற்றோராக எப்போதும் இருக்க வேண்டும் என்பதே மாறாத எதிர்பார்ப்பாக இருக்கின்றது.. இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகிறது.. அது மழலைகள் படிக்கும் பள்ளி.. எந்த ஊர் என்று தெரியவில்லை.. ஆனால், வடமாநிலத்தில் நடந்துள்ளது.
கிளாஸ்ரூமிலேயே...
பொதுவாக, வளர்ந்த மாணவர்களைவிட, இப்படியான மழலைகளை சமாளிப்பதுதான் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சிக்கலாக உள்ளது.. அவர்கள் செய்யும் சேட்டை, குறும்புத்தனம், போன்றவைகளை சகித்துக் கொள்ளும் பொறுமையும் ஆசிரியர்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறது.. அந்தவகையில், இந்த பள்ளியில் படிக்கும், 4 வயதுடைய ஒரு சிறுவனும் வகுப்பறையில் குறும்புத்தனம் ஏதோ செய்துள்ளான்.. இதை பார்த்த அந்த வகுப்பு டீச்சருக்கு கோபம் வந்துவிடுகிறது..
டீச்சருக்கு முத்தம்
அதனால், தன்னுடைய சேரில் வந்து உட்கார்ந்து விட்டார்.. டீச்சர் கோபமாக இருப்பதை கண்ட, அந்த சிறுவன், டீச்சரை சமாதானப்படுத்த முயல்கிறான்.. என்னென்னமோ பேசுகிறான்.. இனிமேல் தவறு செய்ய மாட்டேன் என்று கெஞ்சுகிறான்.. ஆனாலும் டீச்சர் சமாதானமாகவில்லை.. குறும்புத்தனம் செய்ய மாட்டேன் என்று திரும்பத் திரும்ப சொல்லியும், அவன் பேச்சை கேட்க டீச்சர் தயாராக இல்லை என்பதால், அந்த மாணவன் டீச்சரை, தன் பிஞ்சு கைகளால் அணைக்கிறான்..
முத்தம்
பிறகு டீச்சரின் கன்னத்தில் முத்தம் தந்து, இனிமேல் தவறு செய்ய மாட்டேன் என்று சொல்கிறான்.. மறுபடியும் மறுபடியும் டீச்சரை அணைத்துக்கொள்கிறான்.. அதுவரை, "பொய்க்கோபத்துடன்" இருந்த டீச்சரும், அதற்கு மேல் சமாளிக்க முடியாமல், இறுதியில் அந்த சிறுவனின் கன்னத்தில் முத்தமிட்டு, இனி இப்படி குறும்புத்தனம் செய்ய கூடாது என்று கூறி கட்டி அணைத்துக்கொள்கிறார்... ஆசிரியர் மாணவராக இருந்தால் என்ன? வேறு யாராக இருந்தால் என்ன? இந்த உலகம் இன்னமும் இயங்கி கொண்டிருப்பதே அன்பு என்ற ஒற்றை நூலின் பிடியில்தானே.. அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்!!