வாட்டி வதைக்கும் வெயிலுக்கு இதமாக ஜில்லென்ற பயணம்....சென்னை மெட்ரோ ரயிலில் குவியும் கூட்டம்
சென்னையில் வெயில் வாட்டி வதைப்பதாலும் பெட்ரோல் விலை உயர்வாலும் மக்கள் மெட்ரோ ரயிலை நாடத் தொடங்கியுள்ளனர்.
சென்னை: வாட்டி வதைக்கும் வெயில் ஒரு பக்கம் மற்றொரு பக்கம் பெட்ரோல் விலை உயர்வை தாக்கு பிடிக்க முடியாமல் சென்னைவாசிகள் மெட்ரோ ரயிலை நாடத் தொடங்கியுள்ளனர். கடந்த 10 நாட்களில் பல லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் வெயில் பட்டையை கிளம்புகிறது. தூசு ஒரு பக்கம், சுட்டெரிக்கும் வெயில் மறு பக்கம் என வாட்டி வதைக்கிறது. இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி மெட்ரோ ரயில் மட்டுமே என வேலைக்கு செல்வோர் நினைக்கத் தொடங்கி விட்டனர்.
புறநகரில் இருந்து சென்னைக்கு வருவோருக்கு வரப்பிரசாதமாக இருப்பது மெட்ரோ ரயில் மட்டுமே. பெட்ரோல் விலையும் உயர்ந்து வருவதால் மக்களின் கூட்டம் நாளுக்கு நாள் மெட்ரோ ரயில்களில் அதிகரித்து வருகிறது.
சென்னையை வாட்டி வதைக்கப்போகும் வெயில்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய அப்டேட்.. கவனம் மக்களே..!
மெட்ரோ ரயிலில் ஜில் பயணம்
மாசு தூசு எதுவும் இல்லாமல் ஜில்லென்று பயணிக்கலாம் என்பதால் பல பயணிகளும் மெட்ரோ ரயில்களை நாடத் தொடங்கியுள்ளனர். சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணி மனை, பரங்கிமலை - எம்.ஜி.ஆர் சென்ட்ரல் நிலையங்கள் இடையே இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் நாளுக்கு நாள் பயணியர் கூட்டம் அதிகரித்து வருகிறது.
லட்சக்கணக்கான பயணிகள்
கோடையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் சாலை பயணத்தை தவிர்த்து, குளு குளு மெட்ரோவில் பயணிக்க அதிக ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். கடந்த 12ம் தேதியில் இருந்து தினமும் சராசரியாக, 1.50 லட்சம் பேர் பயணித்து உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
தூய்மையான பயணம்
மெட்ரோ ரயில்கள் நேரம் தவறாமல் இயக்கப்படுவதும் குளிர்சாதன வசதி இருப்பதும் இங்கு பராமரிக்கப்படும் துாய்மையும் பயணியரை கவர்ந்துள்ளதாக, மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ ரயில்களில் ஏசி வசதியுடன், விரைவாக பயணிக்கும் வசதி இருப்பதால் மக்கள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர்.
அதிகரிக்கும் பயணிகள்
கடந்த ஜனவரி மாதம் 25 லட்சத்து 19 ஆயிரத்து 252 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதேபோல, பிப்ரவரி மாதம் 31 லட்சத்து 86 ஆயிரத்து 653 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 252 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். க்யூஆர் கோடு குறியீட்டு முறையைப் பயன்படுத்தி 79,179 பேரும், பயணச் சீட்டு வாங்கி 18 லட்சத்து 48 ஆயிரத்து 222 பேரும் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்
சென்னையில் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சென்ட்ரல் சதுக்கம் திறக்கப்பட்ட பின்னர் இந்த ரயில் நிலையம் பிசியான ரயில் நிலையமாக மாறி விட்டது. பயணிகளுக்கு பொழுது போக்கும் ரயில் நிலையமாகவும் உள்ளது.
அதே போல அம்பத்தூர், ரெட்டேரி, பாடி மற்றும் முகப்பேர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பயணிகளை கொண்ட திருமங்கலம் மெட்ரோ ஸ்டேசனில் தினமும் 8,000 பயணிகள் வந்து செல்கின்றனர்.
விமான நிலையம் மெட்ரோ ஸ்டேசன்
விமான நிலையம் மற்றும் உயர்நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலையங்களில் தினசரியும் 7500 பயணிகள் பயன்படுத்துகின்றனர். மெட்ரோ ஸ்டேசனில் இருந்து விரும்பும் இடத்திற்கு செல்வதற்கு ஷேர் ஆட்டோ, மினி பேருந்து வசதியிருந்தால் இன்னும் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரிசுக்கூப்பன்
மெட்ரோ ரயிலில் பயணியர் வருகையை அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன் பயணியருக்கு வழங்கப்படும் என நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி, இத்திட்டத்தில் கடந்த மார்ச்21 முதல் ஏப்20 வரை பயணித்தவர்களில் 10 பயணியர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த திட்டமும் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.