காலையில் கொட்டித்தீர்த்த கனமழை...ஜில்லென்று மாறிய வானிலை - 4 நாட்களுக்கு மழை நீடிக்குமாம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் காலை நேரத்தில் கனமழை கொட்டித்தீத்தது. புதுச்சேரியிலும் விடாமல் கொட்டிய கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுச்சேரியில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் 2 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சற்றே ஓய்வெடுத்திருந்த தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்றிரவு பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இன்று காலை 6 மணி முதலே சாரல் மழையோடு தொடங்கி பலத்த மழை பெய்தது. இரண்டு மணி நேரம் விடாமல் கொட்டிய மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
தமிழக தலைநகர் சென்னையில் வில்லிவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் பெய்து வரும் மழையால் அலுவலகத்திற்கு செல்பவர்கள் மழையில் நனைந்து கொண்டே செல்லத் தொடங்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை
திருவள்ளூர் மாவட்டத்தில் புழல், செங்குன்றம்,அலமாதி உள்ளிட்ட இடங்களில் கனமழையாக கொட்டியது. இதே போல கடலூர் ,விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை,சேலம் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
கள்ளக்குறிச்சி, செஞ்சி, கடலூர், நாமக்கல், விழுப்புரம், அரக்கோணம், விக்கிரவாண்டி, தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. விருதுநகர், அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் ஒருமணி நேரம் பலத்த மழை பெய்தது. திருச்சி மாவட்டத்திலும் சமயபுரம், ஸ்ரீரங்கம், மணச்சநல்லூர் உள்ளிட்ட பல ஊர்களில் காலை முதலே பலத்த மழை பெய்தது.
புதுச்சேரியில் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், நெல்லித்தோப்பு, உப்பளம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

2 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்
இந்த நிலையில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ,கள்ளக்குறிச்சியில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடலூர், ஈரோடு ,சேலம் மாவட்டங்களிலும் 2 மணிநேரத்திற்கு மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டெல்லிக்கு ஆரஞ்ச் அலர்ட்
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்லியில் இன்று அதிகாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரை தொடர்ச்சியாக மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. டெல்லி சப்தர்ஜங் பகுதியில் 73.2 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.

வெள்ளநீர்
ஆசாத் மார்க்கெட் பகுதியில் கனமழை பெய்து தண்ணீர் தேங்கி உள்ளதால் இந்த வழி மூடப்படுவதாக டெல்லி போக்குவரத்து காவலர்கள் அறிவித்துள்ளனர். ஆசாத்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதேபோன்று, டெல்லியின் பிரகதி மைதான், லஜ்பத் நகர் மற்றும் ஜங்புரா பகுதிகள், ஐ.டி.ஓ. ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மூல்சந்த் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் அந்த வழியே செல்லும் வாகனங்கள் நீரில் மிதந்தபடியே செல்ல வேண்டி இருந்தது. இதனை தொடர்ந்து வாகன போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. நீர் தேங்கிய சூழலில் மின்டோ பிரிட்ஜ் பகுதியில் உள்ள சாலை மூடப்பட்டு உள்ளது என்றும் டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

4 நாட்களுக்கு மழை நீடிக்கும்
இதனிடையே இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 22ஆம் தேதி ஞாயிறுக்கிழமை சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குடை அவசியம் மக்களே
23ஆம் தேதி திங்கட்கிழமை சேலம், தர்மபுரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24ஆம் தேதியன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது, கனமழையும் இருக்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் குடையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் மக்களே.












Click it and Unblock the Notifications