தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - ஆரஞ்ச் அலர்ட் விடுத்த இந்திய வானிலை மையம்
இன்று முதல் நவம்பர் 1 வரை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும்.
சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை நீடிக்கும் என்றும் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நவம்பர் 1 வரை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென் மேற்கு வங்ககடலின் மத்திய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைவதால் தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்ச் அலர்ட்' விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகருவதால் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 1ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, குமரி. நெல்லை, தூத்துக்குடியில் இன்று கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
கனமழையால், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.இதனிடையே தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியசரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த மூன்று நாட்களில் மேற்கு நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ராமநாதபுரம்,தூத்துக்குடி,நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அதேபோல, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை தென்காசி,நெல்லை,ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை நீடிக்கும். ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் புவியரசன் கூறியுள்ளார். காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியாக வலுவிழக்கும் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினத்தில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் 10 செமீ, திருவாரூர் 8 செமீ, வேதாரண்யம் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. தென்காசி, நன்னிலம், கன்னியாகுமரி, தூத்துக்குடி,திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களில் கனமழை பெய்துள்ளது.
இன்றைய தினம் தெற்கு மேற்கு வங்கக் கடல் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 30,31ஆம் தேதிகளில் மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications