பாஜகவில் இருந்து ‘டைவ்’ அடிக்க ரெடியான ‘மாஜி’ எம்.எல்.ஏ.. தைலாபுரம் போட்ட தூண்டில்.. கட்சியாங்க அது?
சென்னை : பாமகவில் இருந்து சென்று பாஜகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிராஜ், பாஜகவில் இருந்து விலகி மீண்டும் பாமகவில் இணைய இருக்கிறார்.
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டது முதல், வட மாவட்டங்களில் சூறாவளியாகச் சுற்றிச் சுழன்று தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறார்.
தேர்தல் நெருங்க நெருங்க, கட்சியை பலப்படுத்துவது, வலுவான கூட்டணி அமைப்பது என வியூகங்களை வகுத்து வரும் அன்புமணி, கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் கொண்டு வரும் ஆபரேஷனை நடத்தத் தொடங்கியுள்ளார்.
பாஜக செயல்பாடுகளில் கடுமையாக அதிருப்தி அடைந்ததால், தீவிர அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ ரவிராஜ் பாமக தலைமையின் அழைப்பை ஏற்று மீண்டும் தைலாபுரத்தை நோக்கி கையை நீட்டி இருக்கிறார்.
பாஜகவில் பிரளயத்தை உருவாக்கி வரும் கேசவ விநாயகம் மீது விரைவில் நடவடிக்கை? வெல்லப் போகிறாரா அண்ணாமலை?
அன்புமணி வியூகம்
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்ற பிறகு கட்சியை வலிமைப்படுத்துவதற்கான வியூகங்களை அமைத்து, செயல்படுத்தி வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையிலான ஆட்சி அமையும் எனக் கூறி வரும் அன்புமணி, 2024 லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றி வெளிப்படையாக கூற மறுத்து வருகிறார். 2026ல் ஆட்சி அமைப்பதற்கான வியூகத்தை 2024ல் செயல்படுத்துவோம் எனச் சொல்லி வருகிறார்.
விலகியவர்களுக்கு அழைப்பு
பாமக வலுவாக உள்ள வட மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் அன்புமணி. அதேபோல, கட்சியில் இருந்து அதிருப்தியால் விலகியவர்களுக்கும், மாற்றுக் கட்சிகளில் சேர்ந்தவர்களுக்கும் தூண்டில் போட்டு வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் பாமகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்குச் சென்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ ரவிராஜ்
அந்தவகையில் பாமக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் கடந்த 2017ஆம் ஆண்டு கட்சியில் இருந்து விலகி பின்னர் பாஜகவில் இணைந்தார். திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏவான ரவிராஜ், மலரும் தமிழகம் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார். பாமகவின் மக்கள் டிவியில் நிகழ்ச்சி ஒன்றையும் வழங்கி வந்தார். தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகிய அவர் பாஜகவில் இணைந்தார்.
மீண்டும் பாமகவில்
பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் ரவிராஜ், சமீபகாலமாக பாஜகவில் ஆர்வமாகச் செயல்படவில்லை என்பதைக் கவனித்த பாமக தலைமை, ரவிராஜுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அவரும், இந்த அழைப்பு ஏற்று மீண்டும் பாமகவில் இணையத் தயாராகி வருகிறார். இன்று (டிசம்பர் 7ஆம் தேதி) தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களோடு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் பாமகவில் சேரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய் வீட்டுக்கு
இதுபற்றி தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள ரவி ராஜ், "பாஜக ஒரு கட்சியே இல்லை. அது ஒரு நாடக கட்சி. அதை ஒரு கட்சியாக ஏற்று என்னால் செயல்பட முடியவில்லை. தைலாபுரத்தில் இருந்து வந்த அழைப்பை ஏற்று மீண்டும் தாய்க் கட்சியான பாமகவுக்கு திரும்புகிறேன். என்னைப் போல பாமகவில் இருந்து மாற்றுக் கட்சிகளில் இணைந்த பலரும் திரும்பி வர இருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தலைச் சந்திக்க வியூகம்
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை அறிவித்தால் தான் கூட்டணி என அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து, கூட்டணி அமைத்தார் ராமதாஸ். அப்போது கூட்டணியில் 23 சீட்களைப் பெற்ற நிலையிலும் 5 இடங்களில் மட்டுமே பாமக வென்றது. இதனால், கட்சியிலும், தங்கள் சமூகத்திலும் பெரும் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் அன்புமணி. அதன்படியே, இந்த மாற்றுக்கட்சிகளுக்கு சென்றவர்களை மீண்டும் சேர்க்கும் படலமும் அரங்கேறுகிறதாம்.