கொடிக்கம்பம் விவகாரம்: தமிழக அரசுக்கு பாராட்டு.. அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஐகோர்ட்!
சென்னை: கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டுதல் வகுத்த தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. அரசின் விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி, கொடிக்கம்பங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மண்டல, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, அது தொடர்பான அரசாணையை தாக்கல் செய்தார். அதேபோல், கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு கொடிக்கம்பங்கள் அமைக்கும்போது, சாலை நடுவில் உள்ள சென்ட்டர் மீடியனில் கொடிக்கம்பங்கள் அமைக்கக் கூடாது. 3 நாட்களுக்கு மேல் கொடிக்கம்பங்களை வைத்திருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டு, வழிகாட்டு விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். அரசின் கட்டுப்பாடுகள் ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்படி பின்பற்றப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications