எச்.ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய 17 மாணவர்கள் மீது வழக்கு - ஹைகோர்ட் ரத்து
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்திய சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை கண்டித்து வேப்பேரி காவல் நிலையத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்து வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது டிவிட்டர் பக்கத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதி மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரை அவதூறாக பதிவு செய்ததை கண்டித்தும், எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தியும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகம் முன்பு, வழக்கறிஞர் காசிராஜன் உள்ளிட்ட 17 சட்டக்கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக, வேப்பேரி காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் மீதும், கடந்த 2018 மார்ச் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, 17 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. இவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்து, வழக்கறிஞர் காசிராஜன் உள்ளிட்ட 17 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.