ஹிஜாப் விவகாரம்: கர்நாடகா ஹைகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை - அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
ஹிஜாப் விவகாரம் கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் கர்நாடாக உயர்நீதிமன்றத்தில் இன்று பகல் 2.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வருகிறது.
சென்னை: ஹிஜாப் விவகாரம் கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அனைத்து மாணவர்களும் மத அடையாள ஆடைகளை அணிந்து வர தடை விதித்துள்ள மாநில உயர்நீதிமன்றம், இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற உள்ளது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி அரசு தரப்பு வாதத்தையும், மனுதாரர்கள் தங்கள் வாதத்தையும் எடுத்து வைக்க உள்ளனர்.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் 18 பேர் சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர தங்களை அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக்கோரி கோரியுள்ளனர். இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த மனுக்களை கடந்த 10ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், அனைத்து மாணவர்களும் மத அடையாள ஆடைகளை அணிந்து வர தடை விதித்து உத்தரவிட்டதோடு, கர்நாடகத்தில் பள்ளி கல்லூரிகளை உடனே திறக்க வேண்டும் என்றும், இறுதி தீர்ப்பு வரும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் இந்த மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்தி விரைவாக தீர்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தனர்.
அதைத் தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான விசாரணை 14ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, உயர்நீதிமன்றத்தில் இன்று பகல் 2.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி அரசு தரப்பு வாதத்தையும், மனுதாரர்கள் தங்கள் வாதத்தையும் எடுத்து வைக்க உள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்றைய தினம் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பியூசி, கல்லூரிகள் 16ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் மனு தக்கல் செய்து, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரினர். எனினும் உச்ச நீதிமன்றம் இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications