இந்தியை திணிக்கும் மத்திய அரசு.. ஆட்டை வெட்ட கத்தி தயாராக இருக்கிறது.. வைரமுத்து பரபர பேச்சு
சென்னை: சென்னையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கவிஞர் வைரமுத்து பேசினார். அப்போது, கவிதை நடையில் மத்திய பாஜக அரசை தாக்கி பேசிய வைரமுத்து, ‛‛இந்தியை மத்திய அரசு வேறுவிதமாக திணிக்கிறது. ஆட்டை வெட்ட கத்தி தயாராக இருக்கிறது. தமிழர்களே உணர்ச்சி பெற வேண்டும்'' என பரபரப்பாக பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

பயிற்று மொழியாக இந்தி
இதற்கிடையே தான் சமீபத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தி இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதற்கு தமிழ்நாடு, கர்நாடகா உள்பட இந்தி மொழி பேசாத மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் ஆர்ப்பாட்டம்
மேலும் தமிழ்நாடு அரசு இந்தி திணிப்புக்கு எதிராக தனித்தீர்மானமே நிறைவேற்றி இருக்கிறது. இந்தநிலையில் கவிஞர் வைரமுத்து தலைமையில்,தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்த தமிழ் கூட்டமைப்பு இந்தி திணிப்புக்கு எதிராக இன்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில் 20க்கும் அதிகமான தமிழ் அமைப்புகள் பங்கேற்றனர்.

வைரமுத்து பேச்சு
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் அறிஞர்கள், கலைஞர்கள் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மத்திய அரசு அலுவல் மொழிக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.

வேறுவடிவத்தில் இந்தி திணிப்பு
இந்த குழுவுக்கு உள்துறை அமைச்சர் தலைமை ஏற்றுள்ளார். இந்த குழு சில பரிந்துரைகளை வழங்கப்பட்டுள்ளது. இது பரிந்துரை தானே தவிர மசோதா இல்லை. இதற்கு முன்பு இந்தி எதிர்ப்பு, இந்தி திணிப்பு நடந்துள்ளது. முந்தைய இந்தி திணிப்பு எல்லாம் கொசுக்கடித்தது போல அதனை நசுக்குவது கண்ணுக்கு தெரியும். மூட்டைப்பூச்சி கடித்தது போல் அதனை நசுக்குவது கண்ணுக்கு தெரியும். ஆனால் இப்போதைய இந்தி திணிப்பு வேறு வடிவம் கொண்டுள்ளது.

உணர்ச்சி பெற வேண்டும்
ஒரு ஆட்டுக்கு பூச்சூட்டிவிட்டு பொட்டு வைத்து மஞ்சள் நீர் தெளிப்பது போல் அது நின்று கொண்டிருக்கிறது. கத்தி தயாராக இருக்கிறது. தமிழர்களே விழித்து கொள்ளுங்கள். 1938ல் நேர்ந்த அல்லது எழுந்த எழுச்சியைவிட 1965ல் நேர்ந்த அல்லது எழுந்த எழுச்சியை விட 2022ல் தமிழர்கள் கூடுதல் உணர்ச்சி பெற வேண்டும் என கேட்டு கொள்கிறேன். அதற்குரிய காலம் இப்போது வந்துள்ளது. மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி. இதனை சதாரண போக்கில் புரிந்து கொண்டு போய்விட முடியாது.

பிணத்தை அனுப்ப கூட இந்தி வேண்டும்
இந்திய அயலக தேர்வு முழுவதும் இந்தியில் இருக்க வேண்டும். இந்தி தெரிந்தவராக இருக்க வேண்டும். இந்தியாவுக்கு வெளியே நிகழ்கிற இந்திய அயலக உறவு, இந்திய தூதரகங்கள் முழுவதும் இந்தியில் இயங்க வேண்டும் என்றால் அங்கு இருக்கும் தமிழன், பஞ்சாபி, மலையாளி, கன்னடன், தெலுங்கன் அந்த நாட்டுக்குள் தீங்கு வந்தால் தூதரகம் சென்றால் இந்தி தெரிந்தவராக இருந்தால் மட்டுமே உதவி பெற முடியும். இந்தி தெரிந்திருந்தால் தான் உரையாட முடியும். உறவாட முடியும். பிணத்தை தன் நாட்டுக்கு அனுப்ப முடியும். இது சரியா என்று கேட்கிறோம். சரியான முடிவா? என்று கேட்கிறோம். மத்திய அரசின் அலுவல் மொழி இந்தி என்றால் இந்தி தெரியாத ஒருவர் மத்திய அரசு பணிகளில் இடம்பெற முடியாது. இதன்மூலம் இந்தியை மெல்ல மெல்ல திணிக்க பார்க்கிறார். விழித்து கொள்ள வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications