வெளியே வந்த பூனைக்குட்டி.. துணிச்சல்தான்! ஸ்டாலின் பேச்சுக்கு வடஇந்தியர்கள் ரியாக்சன் என்ன தெரியுமா?
சென்னை: பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று நேரு விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. மாநில உரிமைக்காக அவர் கொடுத்த குரல் பல்வேறு மாநிலங்களில் கவனம் பெற்றுள்ளன.
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று தமிழ்நாடு வந்து இருந்தார். ரூ31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகை புரிந்தார்.
முதல்வர் ஆன பின் முதல் முறை முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் தோன்றினார். முதல்வர் ஸ்டாலின் பல முக்கியமான கோரிக்கைகளை மேடையில் எடுத்து வைத்தார்.
பிரதமர் மோடி முன் முதல்வர் ஸ்டாலின் உரிமைக் குரல் பாஜகவை கதிகலங்கவைத்துள்ளது- குவியும் பாராட்டுகள்!
ஸ்டாலின்
மேடை பேச்சுக்கு பின் முதல்வர் ஸ்டாலின்.. தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை பிரதமரிடம் கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்டாலினோ.. "i have better ideas" என்று சொல்லும் அளவிற்கு மேடையிலேயே பிரதமர் மோடி முன்னிலையிலேயே தனது கோரிக்கைகளை எடுத்து வைத்தார். கச்சத்தீவை மீட்பது, மாநில உரிமைகளை காப்பது, தமிழ்நாடு அலுவல் மொழியாக அங்கீகரிப்பது என்று ஸ்டாலின் பேச்சு முழுக்க வலிமையான கோரிக்கைகள் அடங்கி இருந்தன.
ஸ்டாலின் பேச்சு
அதோடு வார்த்தைக்கு வார்த்தை முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசு என்று கூறியதும் கவனம் பெற்றது. நேற்று 16 முறை முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதோடு ஜிஎஸ்டி நிலுவை தொகை நீட்டிப்பு தொடங்கி நீட் தேர்வு வரை பல மாநில உரிமைகளை எடுத்துரைக்கும் விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் பேசினார். ஸ்டாலினின் பேச்சால் மொத்தமாக பாஜக தரப்பு அப்செட் ஆகியுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவே ஸ்டாலின் பேச்சை கடுமையாக விமர்சித்தார்.
ஸ்டாலின் மோடி
பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு ஸ்டாலின் இப்படி பேசியது அநாகரீகம்.. அது ஒரு கருப்பு புள்ளி என்று அண்ணாமலை கடுமையாக பேசினார். அண்ணாமலை மட்டுமின்றி இன்னும் பல பாஜக தலைவர்களும் ஸ்டாலின் பேச்சை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் மோடி முன்னிலையில் இப்படி பேச மாட்டார். தனியார் கோரிக்கை கடிதம் வேண்டுமானால் கொடுப்பார் என்று பாஜக தலைவர்கள் நினைத்த நிலையில்தான் ஸ்டாலின் நேரடியாக மேடையிலேயே தனது கருத்தை எடுத்துரைத்தார்.
மோடி விமர்சனம்
ஸ்டாலினின் பேச்சு வடஇந்தியாவில் கவனத்தை ஈர்த்து உள்ளது. வடஇந்தியர்கள் பலர்.. தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் யாரும் இப்படி பேசுவது இல்லை என்று சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டே ஸ்டாலின் இப்படி பேசி இருக்கிறார் என்று கூறி உள்ளனர். அதே சமயம் ஸ்டாலின் பேசியது கட்சி நிகழ்வு அல்ல.. அரசு நிகழ்வு.. அவர் பிரதமரை மதித்து இருக்க வேண்டும் என்றும் பாஜக ஆதரவு வடஇந்தியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வடஇந்தியா ரியாக்சன்
முதல்வர் ஸ்டாலின் மொழி உரிமை பற்றி பேசி இருக்கிறார். இந்திக்கு இணையாக தமிழை அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்று அறிவித்து இருக்கிறார். அதுவும் மோடிக்கு முன்பாக பேசி இருக்கிறார். இந்த மொழி விவாதத்தை தொடங்கி வைத்தது மோடிதான்.. பூனை குட்டியை வெளியே திறந்துவிட்டது மோடிதான். அவருக்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின் மொழி உரிமை பற்றி பேசி உள்ளார் என்று வடஇந்தியர்கள் பலர் குறிப்பிட்டு உள்ளனர்.
மேடை இஸ்லாமியர்
முக்கியமாக வடஇந்தியர்கள் பலர் நேற்று மேடையில் இஸ்லாமிய பெண் முன்னிறுத்தப்பட்டதை பற்றி கமெண்ட் செய்து வருகிறார்கள். இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை இந்தியாவில் எதிர்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக ஹிஜாப்பிற்கு எதிராக பாஜக ஆளும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்கள். ஆனால் நேற்று ஹிஜாப் அணிந்த பெண்மணி மேடையில் தோன்றியது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
வங்கம் ஆதரவு
மேற்கு வங்கத்தை சேர்ந்த கர்கா சட்டர்ஜி, முதல்வர் ஸ்டாலின் மொழி உரிமை பற்றி பேசி உள்ளார். அண்ணா, கருணாநிதி ஆகியோரின் அரசியல் வாரிசான ஸ்டாலின் பல்வேறு மாநிலங்களுக்காக பேசி இருக்கிறார். நாங்கள் தமிழர்களுடன் இருக்கிறோம். வங்கத்து மக்கள் சார்பாக உங்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
கேசிஆர்
நேற்று பிரதமர் மோடி சென்னை வரும் முன் ஹைதராபாத் சென்றார். அப்போது பிரதமர் மோடியுடன் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை. இதை வைத்து பலர்.. கேசிஆர் போல ஸ்டாலின் மேடையை தவிர்க்கவில்லை. மாறாக தனக்கு கிடைத்த மேடையில் துணிச்சலாக பேசி இருக்கிறார். மாநில உரிமைக்காக ஸ்டாலின் தைரியமாக பேசி இருக்கிறார் என்று குறிப்பிட்டு உள்ளனர்.