4.30க்கு இறங்கி.. 10.30க்கு ரிமாண்ட்.. ‘மலப்புரத்தில் நடந்தது இங்கேயும் நடக்கும்’ - அண்ணாமலை பரபர!
சென்னை : கேரள மாநிலம் மலப்புரத்தில் பி.எ.ஃப்.ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியுள்ளார்.
காலையில் 4.30 மணிக்கு இந்திய விமானப்படை விமானம் மல்லப்புரத்தில் இறங்கியது. தேசவிரோதிகளை சி.ஆர்.பி.எஃப் படையினர் கைது செய்து விமானப்படை விமானத்தில் ஏற்றினார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார்.
இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்க பேனாவை எடுப்பதற்கு முன்பு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 10.30 மணிக்கு ரிமாண்டில் எடுத்துவிட்டார்கள் என அண்ணாமலை பேசியுள்ளார்.
கேரளாவில் பிஎஃப்ஐ தலைவர் ஓஎம்ஏ சலாம், மாநிலத்தலைவர், சிபி மொகம்மது பஷீர், தேசிய செயலாளர் நஸ்ருதீன் தேசிய செயற்குழு உறுப்பினர் கோயா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விரசாணைக்காக காவலில் எடுக்கப்பட்ட சம்பவம் குறித்து கோவையில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

பி.எஃப்.ஐ மீது சோதனை
தமிழகம் உட்பட நாடு முழுவதும் 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள், தலைவர்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதையடுத்து 106 பி.எப்.ஐ அமைப்பின் நிர்வாகிகளை கைது செய்தது என்ஐஏ. கேரளாவில் 22 பேரும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் தலா 20 பேரும், தமிழ்நாட்டில் 11 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

பாஜக ஆர்ப்பாட்டம்
பாஜக நிர்வாகிகள் மீதான கைது நடவடிக்கை, தமிழகத்தில் தொடர்ந்து வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள், தி.மு.க ஆ.ராசாவின் இந்துக்கள் பற்றிய கருத்து உள்ளிட்டவற்றைக் கண்டித்து கோவை சிவானந்தா காலனி பகுதியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல் குண்டு வீசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய், ஆ.ராசவை கைது செய் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

திமுக அரசு
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "தந்தை பெரியார் கொள்கையை வைத்து திமுக ஒரு மதத்தை மட்டும் இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. பெரியாரின் காலத்தில் இருந்து தற்போதைய திமுக செயல்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் சாதி பார்த்து தேர்தலில் போட்டியிட வைக்கிறது திமுக. ஆ.ராசா, மத மாற்றத்தை தூண்டுகிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். கோவையில் போஸ்டர் ஒட்டக்கூட்டாது என்று கூட்டம் போடுவது மட்டும் தான் மாவட்ட ஆட்சியரால் முடிகிறது. அதை செயல்படுத்த முடியவில்லை.

11 பேர்
18 கோடி மக்களுக்கு நடந்த அநியாயத்திற்காக தான் இங்கு வந்திருக்கிறோம். 10 ஆண்டுகள் காலம் காத்திருந்து வீர வசனம் பேசிய முதலமைச்சர், கலவரத்தை யார் செய்தார்களோ அவர்களை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. திமுகவின் 15 மாத கால ஆட்சியில் மாநிலத்தில் பிரச்சனைதான் செய்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்ததில் எஸ்டிபிஐ சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கேரளாவில் மல்லபுரம் பகுதியில் ஒருவரை என்ஐஏ கைது செய்து டெல்லி கோர்ட்டில் ஆஜர் செய்தது.

மல்லப்புரம்
என்ன செய்தாலும் கைது செய்ய மாட்டார்கள், இப்படியே பேசிவிட்டு விட்டுவிடுவார்கள் என நினைக்கிறார்கள். கேரளாவின் மல்லப்புரத்தில் பி.எஃப்.ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டார்கள். மல்லப்புரம், 90 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கும் மாவட்டம். காலையில் 4.30 மணிக்கு இந்திய விமானப்படை விமானம் மல்லப்புரத்தில் இறங்கியது. தவறு செய்தவர்கள், குற்றவாளிகள், தேசவிரோதிகளை சி.ஆர்.பி.எஃப் படையினர் தூக்கினர்.

10.30 மணிக்கு ரிமாண்ட்
விமானப்படை விமானத்தில் ஏற்றினார்கள். இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்க பேனாவை எடுப்பதற்கு முன்பு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 10.30 மணிக்கு ரிமாண்டில் எடுத்துவிட்டார்கள். இதுபோன்ற நிலை தமிழகத்தில் நடக்க வேண்டும் என நினைத்தால் கண்டிப்பாக நடக்கும். முதல்வருக்கு ஐபிசி தெரியுமா என்று எனக்குத் தெரியாது. நான் 11 ஆண்டுகள் அதாவது 5000 நாட்கள் நான் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஐபிஎஸ் வழக்குகளை பதிவு செய்துள்ளேன்.

மத்திய அரசுக்கு அதிகாரம்
மல்லப்புரத்தில் கைது நடவடிக்கை எப்படி இருந்தது என கூகுள் செய்து பாருங்கள். அது தமிழ்நாட்டில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடக்க வேண்டும் என்றால் நடக்கும். மத்திய அரசுக்கு இதற்கு அதிகாரம் இருக்கிறது. மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என நினைத்துவிட வேண்டாம்." என ஆவேசமாகப் பேசினார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications