கொரோனாவை எதிர்கொள்ள உதவும் கபசுர குடிநீரை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? யார் எவ்வளவு பருகலாம்?
சென்னை: கொரோனாவை எதிர்கொள்ள உதவும் கபசுர குடிநீரை தயாரிப்பது எப்படி என்பது குறித்து இம்ப்காப்ஸ் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அத்துடன் யாரெல்லாம் குடிக்கலாம், எவ்வளவு அளவு குடிக்கலாம் என்பது குறித்தும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டி படைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கொரோனாவை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முக்கியம் என சொல்லப்படுகிறது.
இதைத்தான் மருத்துவர்களும் வலியுறுத்துகிறார்கள். கொரோனாவை ஒழிக்க தடுப்பு மருந்து கண்டறியும் வரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீரையும், நிலவேம்பு கசாயத்தையும் குடிக்குமாறு மத்திய ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.
ரத்தம் தானம்.. கபசுர குடிநீர்.. உணவு பொருட்கள்.. தேடி தேடி உதவும் நாம் தமிழர் கட்சியினர்.. செம!
கசாயம்
இதற்காக இந்த மருந்தை வாங்க அரசு சித்த மருத்துவமனைகளுக்கு படையெடுத்தனர். தமிழக அரசும் ஆங்காங்கே கபசுர குடிநீரை வழங்கி வருகிறது. இதையடுத்து பலர் நாட்டு மருந்து கடைகளுக்கு சென்று கபசுர குடிநீர் , நிலவேம்பு கசாயம் ஆகியவற்றை வாங்கி வீட்டிலேயே காய்ச்ச முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அவற்றை எப்படி பயன்படுத்துவது என தெரியவில்லை.
முத்தக்காசு
இதுகுறித்து இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்துசெய் நிலையம் மற்றும் பண்டக சாலை (இம்ப்காப்ஸ்) நிறுவன தலைவர் டாக்டர் கண்ணன் மற்றும் மருத்துவ அதிகாரி டாக்டர் கரு. கார்த்திகேயன் ஆகியோர் கூறுகையில் சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சொறி வேர், அக்கரகாரம், முள்ளிவேர், கடுக்காயத்தோல், ஆடாதொடா இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் கொடி, சிறு தேக்கு, நிலவேம்புக் கமூலம், வட்டத்திருப்பி வேர் (பாடக் கிழங்கு), முத்தக்காசு (கோரைக்கிழங்கு) உள்ளிட்ட 15 மூலிகைகளை தலா 35 கிராம் எடுத்து முறைப்படி சுத்தம் செய்து ஒன்றும் பாதியுமாக இடித்து கொள்ள வேண்டும்.
கசாயம்
பின்னர் அவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த சூரணத்தில் இருந்து 5 கிராமை எடுத்துக் கொண்டு 200 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த தண்ணீர் நன்கு கொதித்து 50 மில்லி (அதாவது 4-இல் ஒரு பங்கு) வரும் வரை காய்ச்சி வடிக் கட்டி கொள்ள வேண்டும். வடிகட்டிய கசாயத்தை தினமும் 2 அல்லது 3 வேளை குடிக்கலாம்.
வாரம் 3 நாட்கள்
இந்த கபசுர குடிநீரை 1 முதல் 5 வயது வரை உள்ளவர்கள் 5 மில்லியும் 5 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 10 மில்லியும், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு 30 முதல் 50 மில்லி வரை குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் குடித்தால் மிகவும் நல்லது. ஏதேனும் உடல்உபாதை இருந்தால் மருத்துவரிடம் கேட்டு உணவுக்கு முன்போ பின்போ அருந்தலாம். வாரத்திற்கு 3 நாட்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வரலாம்.
தேவையில்லை
சர்க்கரை மற்றும் ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் படி இந்த கசாயத்தை பயன்படுத்த வேண்டும். இந்த கசாயத்தை குடிக்கும் போது தயார் செய்து கொள்ள வேண்டும். தயார் செய்து 3 மணி நேரம் கழித்து குடிக்கவே கூடாது. 1 வயது குழந்தைகள், டைபாய்டு காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியன உள்ளவர்கள் குடிக்க வேண்டாம். கர்ப்பிணிகளும் முதல் 3 மாதங்களுக்கு குடிக்கத் தேவையில்லை என்றனர் மருத்துவர்கள்.