"மூச்சு முட்டுதே".. 100% இனிமே மிஷின்தான்.. நீங்குகிறது டேஞ்சர்.. பெரிய நம்பிக்கை தந்த நிர்மலா.. வாவ்
கழிவுநீர் தொட்டிகள், சுத்திகரிப்பில் 100 சதவீதம் இயந்திரப் பயன்பாடு என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: கழிவுநீர் தொட்டிகள், கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100 சதவீதம் இயந்திரப் பயன்பாடு உறுதி செய்யப்படும். நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் இது அமல்படுத்தப்படும்" என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்..
நவீனத்தை நோக்கி மக்கள் நகர்ந்து கொண்டிருந்தாலும், மனித கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களே பயன்படுத்தும் அவலம்தான் இன்றும் தொடர்ந்து வருகிறது..
இதற்கான முறையான தொழில்நுட்பம் எதுவும் பயன்படுத்தாமல் இருப்பதனால், மனிதர்களை கொண்டு மனித கழிவுகளை சுத்தம் செய்ய சொல்கிறோம்.
சுரண்டல்கள்
இந்த செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்வதில், மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று சட்டமே இருக்கிறது.. எனினும், விளிம்பு நிலை மக்களை, இத்தகைய டேங்க்கில் இறக்கி சுத்தப்படுத்துவம் அவலத்தை, இப்பொதுச்சமூகம் தொடர்ந்து அனுமதித்து கொண்டேயிருக்கிறது.. அதிலும், விவசாயம் பொய்த்துப்போய், உயிர்வாழ்வதற்காக நாடியும், நம்பியும் வரும் தொழிலாளர்களை வைத்தே கழிவுநீர் தொட்டிகள் தூய்மை செய்யப்படுகின்றன.. இவர்கள் உழைப்பு சுரண்டலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.. ஊதிய சுரண்டலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். அதைவிட ஒருபடிமேலே போய், உயிரையும் தந்துவிடுகிறார்கள்..
மூச்சு முட்டிடுதே
இந்த பணியில் உயிருக்கு ஆபத்தான சூழல் இருப்பது அனைவரும் அறிந்த உண்மையே.. ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தேதான், எத்தனையோபேர், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காக, வேறு வழியில்லாமல் இந்த பணியில் இறங்குகின்றனர். அப்படி மனித கழிவுகளை சுத்தம் செய்யும்போதுதான், பல தருணங்களில் மரணங்களும் நிகழ்ந்துவிடுகின்றன.. கழிவு நீர் தொட்டி, கழிப்பிடங்களை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி, அதே கழிவு நீர் தொட்டியிலேயே மூச்சு முட்டி உயிரிழக்கும் சோகங்கள் நடந்து வருகின்றன.. அதனால்தான், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் மோசமான சூழலிலிருந்து, இந்த தேசம் முன்னேறி செல்ல வேண்டும் என்று மனித உரிமை செயல்பாட்டாளர்கள் விடாமல் வலியுறுத்தி வருகிறார்கள்..
விதிவிலக்கல்ல
மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்திற்கு தமிழகமும் விலக்கல்ல.. அறிவியல், பொருளாதாரம், கல்வி, வளர்ச்சி இப்படி பல துறைகளில் முன்னோடியாக உள்ள தமிழகம் மனித கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களின் இறப்பில் இடம்பிடித்து வருவதும் வருந்தத்தக்கது... சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஒரு புள்ளிவிரம் வெளியிட்டிருந்தது.. அதில், கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் போது கடந்த ஆண்டு மட்டும் 400 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக கூறியிருந்தது.. இந்த லிஸ்ட்டில் மூன்றாம் இடத்தில் தமிழ்நாடு இடம்பெற்றிருந்தது.
சூப்பர் அறிவிப்பு
கழிவுநீர் தொட்டிகள், சாக்கடைகள் அகற்றும் பணி முற்றிலும் எந்திரமயக்காப்படும் என்று அரசுகள் ஒவ்வொருமுறையும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. ஆனால், அந்த அறிவிப்புகள், நிரந்தரமாக அறிவிப்புகளாகவே நின்றுவிடுகின்றன.. உள்ளாட்சி நிர்வாகங்களில் கழிவகற்றும் இயந்திரங்கள் இருப்பினும், அவைகள் முழுமையாகவும் முறையாகவும் பயன்படுத்துவதில்லை.. அதுமட்டுமல்லாமல் தேவைக்கேற்ப இயந்திர பயன்பாடுகளும் தற்போது அதிகளவில் இல்லை என்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு விடிவாகத்தான் இன்றைய பட்ஜெட் அறிவிப்பு அமைந்துள்ளது.. கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் 100 சதவீதம் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்ற உறுதிமொழி தரப்பட்டிருக்கிறது...
மாஸ் அறிவிப்பு
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய அறிவிப்பில், "நாட்டில் உள்ள அனைத்து நகரங்களிலும், சிறு நகரங்களிலும் (டவுன்) கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தக் கூடாது... பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை தூய்மை செய்வதற்கான இயந்திரங்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் கொள்முதல் செய்யும் நடவடிக்கையை தொடங்க வேண்டும். இனி மேற்கூறிய பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலான மனிதர்களின் நலனுக்காக ஒருதரப்பு மக்கள் கஷ்டப்படுவதை அனுமதிக்க முடியாது என்று உறுதிபட கூறியுள்ளார்.
முற்றுப்புள்ளி
அத்துடன், கழிவுநீர் தொட்டிகள், கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100 சதவீதம் இயந்திரப் பயன்பாடு உறுதி செய்யப்படும். நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் இது அமல்படுத்தப்படும்" என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.. இன்றைய தினம் பட்ஜெட்டில் வெளிவந்துள்ள இந்த அறிவிப்பானது, மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.. மனிதக் கழிவை மனிதனே அகற்றும் இழிவு நிலைக்கு ஒரு முடிவு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், மனிதரை இழிவாக நடத்தும் இந்த போக்கிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றே நம்பப்படுகிறது...!!