வாவ்.. வேற லெவலில் இருக்கு சென்னை செஸ் ஒலிம்பியாட்.. ஹங்கேரி செஸ் கூட்டமைப்பு நிர்வாகி வியப்பு!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக இருப்பதாக ஹங்கேரி செஸ் குழுவினர் வியந்து பேசியுள்ளனர்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று முதல் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடக்க விழா
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் 8 மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள், நிகழ்த்துக் கலை, இசை நிகழ்ச்சிகள் ஆகியவை பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விதிவிதமான உணவுகள்
இதனைத்தொடர்ந்து இன்று செஸ் வீரர்கள், குழுவினர் அனைவரும் மாமல்லபுரம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கும் பிரம்மாண்ட அரங்குகள், செஸ் விளையாடுக்கான மேடைகள் என தமிழக அரசு பிரம்மாண்டமாக அசத்தியுள்ளது. இவர்களுக்கு தினமும் விருந்து வழங்குவது போன்று விதவிதான வகை உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 77 மெனுக்கள் உருவாக்கப்பட்டு அதில் 53 மெனுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த 53 மெனுவில் 700க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் முக்கியமான உணவுகள் மீண்டும் மீண்டும் ஒரே வகையில் வழங்கப்படக்கூடாது என கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செஸ் ஒலிம்பியாட் எங்கு?
இதனிடையே 2024ம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தமிழக அரசின் ஏற்பாடுகளை பார்ப்பதற்காக ஹங்கேரி செஸ் கூட்டமைப்பு குழுவினர் மாமல்லபுரம் வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக அரசின் ஏற்பாடுகளை பார்த்த அந்தக் குழு வியப்பில் ஆழ்ந்துள்ளது.

வியப்பில் ஹங்கேரி குழு
இதுகுறித்து ஹங்கேரி செஸ் கூட்டமைப்பு நிர்வாகி கூறுகையில், வரும் 2024ம் ஆண்டு ஹங்கேரியில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பார்த்து திட்டமிடுவதற்காக வந்துள்ளோம். தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள் நவீனமாகவும், அழகாகவும் காட்சியளிக்கிறது. இது தான் எனது முதல் செஸ் ஒலிம்பியாட். இதற்கு ஐரோப்பாவில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.
ஆனால் அங்கு அரங்குகள் அனைத்து சிறியதாக இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி அல்ல. மிகவும் பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் புரியும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications